போர் நினைவுச் சின்னம் இல்லாத ஒரே நாடு இந்தியாதான்.. மோடி புகார்
மும்பை: நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு காங்கிரஸ் போர் நினைவுச் சின்னத்தை அமைக்கவில்லை என்று குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
சீனாவுடன் 1961ல் நடைபெற்ற போரில் உயிர் நீத்த வீரர்கள் நினைவாக. லதா மங்கேஷ்கர் பாடிய பாடலின் 51வது ஆண்டு நிறைவை ஒட்டி மும்பையில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நரேந்திர மோடி பேசியதாவது:
நாடுக்காக உயிர் நீத்த வீரர்களுக்காக காங்கிரஸ் அரசு, ஒரு போர் நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தவில்லை. அந்த நல்ல பணியை எனக்காக அவர்கள் விட்டு வைத்திருக்கின்றனர்.
போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை கவுரவிப்பதற்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னம் இல்லாத ஒரே நாடு இந்தியாதான் என்பது வேதனையான விஷயம். அடுத்து வரும் பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
கவி பிரதீ்ப் எழுதிய இந்த பாடலை, சி.ராமச்சந்திரா இசையமைக்க 1963 ஆம் ஆண்டு ஜனவரி 27ந் தேதி அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு முன்னிலையில் லதா மங்கேஷ்கர் பாடினார். லதா மங்கேஷ்கர் தற்போது கடந்த காலத்தை நம்முடன் இணைத்துள்ளார். நேரு முதலில் கேட்ட பாடலை நாமும் இப்போது கேட்பது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
நிகழ்ச்சியில் லதா மங்கேஷ்கர் பேசுகையில், இந்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். மோடியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் என்னுடைய நன்றி என்றார்.
புனேயில் கடந்த நவம்பர் மாதம் தன்னுடைய தந்தை நினைவாக கட்டப்பட்ட மருத்துவ மனை திறப்பு விழாவில் பேசிய லதா மங்கேஷ்கர், நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று இந்தியாவில் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர் என்றார். அது அப்போது சர்ச்சையை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.