இஸ்லாமாபாத்தில் ஜன.15-ல் இந்தியா- பாக். வெளியுறவு செயலர்கள் பேச்சுவார்த்தை
டெல்லி/ இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் 15-ந் தேதி இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் சர்ஜாஸ் அசிஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திடீரென பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டிருந்தார். இதையடுத்து இருநாடுகளிடையே உறவு சீர்பட ஆரம்பித்தது.
இதை சீர்குலைக்கும் வகையில் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் 7 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்குள்ளான விமான படை தளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். இத்தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியும் வருகிறது.
இந்நிலையில் வரும் 15-ந் தேதியன்று இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் தெரிவித்துள்ளார். இப் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம், பதன்கோட் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.