இந்தியாவுடன் இணைந்து அதி நவீன ஏவுகணை தயாரிக்கும் ரஷ்யா! பாகிஸ்தானின் எந்த பகுதியையும் தாக்க முடியும்
டெல்லி: பாகிஸ்தானின் எந்த ஒரு பகுதியையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் அளவுக்கு நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை இந்தியா-ரஷ்யா இணைந்து தயாரிக்க உள்ளன.
சமீபத்தில் கோவாவில் நிறைவுற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது, இந்தியா-ரஷ்யா நடுவே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்த ஒப்பந்தங்களில், போர்க்கப்பல் கொள்முதல் உள்ளிட்ட விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டன. ஆனால் பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தகவலை இந்தியா வெளியிடவில்லை.
அதேநேரம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நாட்டில் அளித்த பேட்டியில், இத்தகவலை தெரிவித்துள்ளார். பிரம்மோஸ் ஏவுகணை தற்போது அதிகபட்சமாக 300 கி.மீ தூரம் பாயக்கூடியது. இதை 600 கி.மீ தூரத்திற்கு நீட்டிக்க ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா செயல்படப்போகிறதாம்.
நிலம், கப்பல், விமானம் ஆகிய மூன்று மார்க்கங்களில் இருந்தும் குறி தப்பாமல் ஏவக்கூடிய ஏவுகணைகளை இந்தியா-ரஷ்யா இணைந்து உருவாக்க உள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பிரம்மோஸ் ஏவுகணை 300 கி.மீதான் பாயும் என்பதால், பாகிஸ்தானின் அனைத்து பகுதிகளையும், இந்தியா நினைத்தாலும் தாக்க முடியாது. ஆனால் 600 கி.மீ தூரம் வரை பாயும் வகையில் பிரம்மோஸ் மேம்படுத்தப்படும்போது, பாகிஸ்தானின் எந்த ஒரு மூலையிலுள்ள இலக்கையும், குறி தவறாமல் தாக்கி அழிக்க இந்தியாவுக்கு வலிமை கிடைத்துவிடும்.
இந்தியா கடந்த ஜூன் மாதம்தான், ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான், சீனா எதிர்ப்புக்கு நடுவே இந்த அமைப்பில் இந்தியாவுக்கு இடம் கிடைத்தது. பாகிஸ்தானுக்கும் இடம் தர சீனா வலியுறுத்தியபோதிலும் அது நடக்கவில்லை.
இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகள் ஏவுகணை தொழில்நுட்பத்தை ஒருவருக்கொருவர் மேம்படுத்த உதவ முடியும். அதன் பலனைத்தான் இப்போது இந்தியா பெறப்போகிறது. இதில் உறுப்பு நாடுகளாக இல்லை எனில், 300 கிமீ தூரத்திற்கு அதிகமாக பாயும் ஏவுகணை தொழில்நுட்பங்களை பரிமாற முடியாது. அதுபோன்ற ஏவுகணைகளை விற்பனை செய்யவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.