இந்தியாவின் ஜிசாட் 16 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!
பெங்களூரு: இந்தியாவின் புதிய தகவல் தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட் 16 இன்று அதிகாலையில் பிரெஞ்சு கயானாவிலிருந்து ஏரியான் 5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட செயற்கைக் கோள் ஏவுதல் இன்று அதிகாலையில் வெற்றிகரமாக நடந்தேறியது.
பிரான்சில் உள்ள கொரு விண்கல ஏவுதளத்திலிருந்து ஐரோப்பிய யூனியனின் ஏரியான் 5 ராக்கெட் மூலம் இந்திய செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தியாவின் தகவல் தொடர்பு சேவைக்கான பிரத்யேக செயற்கைக் கோள் ஜிசாட் 16. இது இன்சாட் செயற்கைக் கோள்களுக்கு மாற்றானதாகும்.
இந்தியாவின் செயற்கைக் கோளுடன், அமெரிக்காவின் டைரக்ட்டிவி-14 என்ற செயற்கைக் கோளும் சேர்த்து ஏவப்பட்டது.
ஏரியான் 5 ராக்கெட்டின் 63வது விண்வெளிப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய, அமெரிக்க செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்டதாக ஏரியான் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் ஜிசாட் 16 செயற்கைக் கோளானது 3181 கிலோ எடை கொண்டது. அதில் 48 தகவல் தொடர்பு டிராண்ஸ்பாண்டர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் இஸ்ரோ தயாரித்துள்ள தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களிலேயே இதுதான் பெரியதாகும்.
ஏரியான் ராக்கெட் முதலில் அமெரிக்க செயற்கைக் கோளை விண்வெளியில் செலுத்தியது. அது செலுத்தப்பட்ட 4 நிமிடங்களுக்குப் பிறகு இந்திய செயற்கைக் கோள் விண்வெளியில் விடப்பட்டது.
ஜிசாட் 16 மூ்லம், இந்தியாவில் அரசு மற்றும் தனியார் டிவி, ரேடியோ சேவைகள் மேலும் மேம்படும். மேலும் இன்டர்நெட், தொலைபேசி சேவைகளும் மேம்படும்.
இந்தியாவின் வசம் தற்போது பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ஆகிய ராக்கெட்டுகளால் 2 டன் எடைக்கு மேலான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடியாது. எனவேதான் வெளிநாட்டு ராக்கெட் மூலம் நாம் அதைச் செலுத்த வேண்டியுள்ளது.
இருப்பினும் 4 டன் எடை அளவிலான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த வசதியாக, ஜிஎஸ்எல்வி எம்கே 3 என்ற அதி நவீன ராக்கெட்டை இஸ்ரோ தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.