இந்தியா-இலங்கை மீனவர்கள் இடையே ஏப்ரல் 7- ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை
இந்தியா இலங்கை மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை கொழும்புவில் நடைபெற உள்ளது.
டெல்லி: இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக கொழும்பில் வரும் 7-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய- இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டெல்லியில் கடந்த ஆண்டு நவம்வர் 2-ம் தேதி இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நவம்பர 5-ம் தேதி மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய- இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான கூட்டமும் நடைபெற்றது.
இக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீன்வளம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேசி முடிவு எடுக்க கூட்டு செயல்திட்டக் குழு கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், இரு நாட்டு மீன்வளத் துறை அமைச்சர்கள் கூட்டத்தை 6 மாதங்களுக்கு ஒரு முறையும் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த ஜனவரி 2-ம் தேதி இரு நாட்டு வெளியுறவு அமைச்சகங்கள், கடற்படை, கடலோரக் காவல் படை பிரதிநிதிகள் பங்கேற்ற இரண்டாவது பேச்சு வார்த்தை கொழும்பில் நடைபெற்றது.
இந்நிலையில் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை வரும் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இருநாட்டு மீனவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இதில் மீனவரகள் பிரச்சினை குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.