சர்ஜிகல் ஸ்டிரைக் வீடியோ ஆதாரங்களை அளிக்கத் தயார்- இந்திய ராணுவம்
டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான எல்லை தாண்டிய தாக்குதல் குறித்த வீடியோ ஆதாரங்களை அளிக்க தயார் என இந்திய ராணுவம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் யூரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், தக்க பதிலடியை இந்திய அரசு கொடுத்துள்ளது. உரி தாக்குதலுக்கு பழி தீர்க்கும் பொருட்டு, எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம், தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது.
இந்த தாக்குதலில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில், 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.
அதே நேரம் இப்படியொரு தாக்குதல் நடைபெறவில்லை என அந்நாட்டு ராணுவம் கூறினாலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்தியா - பாகிஸ்தான இடையேயான ஐக்கிய நாடுகள் சபையின் ராணுவ கண்காணிப்பு குழுவானது இதனை நேரடியாக கண்காணிக்கவில்லை. இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரியவில்லை என ஐநா சபையின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன்னின் செய்தித் தொடர்பாளரும் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு இந்திய தரப்பில் உடனே மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
யாரேனும் கண்காணித்தாலும், இல்லை யென்றாலும் உண்மை என்றும் மாறாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியும் இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து பல வித கருத்துக்களை கூறி வருகிறது. தாக்குதல் நடந்ததா? இல்லையா? என்பதில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், எல்லை தாண்டிய தாக்குதல் குறித்த வீடியோ ஆதாரங்களை அளிக்க தயார் என இந்திய ராணுவம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. ஆனால், இதுகுறித்து இறுதி முடிவை பிரதமர் மோடி அலுவலகம் தான் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.