அல் கொய்தாவுடன் சேரும் இந்தியன் முஜாஹிதீன்?: எரிச்சலில் ஐஎஸ்ஐ
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பயங்கர தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவுடன் கைகோர்த்து செயல்பட திட்டமிட்டுள்ளது. அல் கொய்தா தலைவர் ஜவாஹிரி ஜிகாத் பற்றி சில குறிப்புகளை அளித்த சில நாட்களில் இந்தியன் முஜாஹிதீன் இப்படி திட்டமிட்டுள்ளது. இரு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவிருக்கிறதாம்.
இந்தியன் முஜாஹிதீன் அல் கொய்தா இந்தியாவில் செயல்பட உதவி செய்யுமா அல்லது அந்த அமைப்போடு தன்னை இணைத்துக் கொள்ளுமா என்பது விரைவில் தெரிய வருமாம்.
இந்தியன் முஜாஹிதீனின் இந்த திட்டம் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ-ஐ எரிச்சல் அடைய வைத்துள்ளதாம். இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு ஐஎஸ்ஐ நிதியுதவி செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக அந்த அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் தெரிவித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த ரியாஸ் பட்கல் மற்றும் மிர்சா சதாப் ஆகியோர் ஆப்கானிஸ்தான் சென்று ஜவாஹிரியை சந்திக்க திட்டமிட்டதாக யாசின் தேசிய புனலாய்வு நிறுவனத்தாரிடம் தெரிவித்தான். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர்களான ரியாஸ் மற்றும் இக்பால் பட்கல் தற்போது பாகிஸ்தானில் உள்ளனராம்.