குஜராத் குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை பெற்றவர் தந்தை சமாஜ்வாதி கட்சிக்கு பிரச்சாரம்.. யோகி தாக்கு
லக்னோ: அகமதாபாத் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்தியன் முஜாகிதீன் அமைப்புக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், நாளை 3-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர தீவிர பிரசாரத்தைக் கையிலெடுத்துள்ளது. லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடர் பிரசாரத்தில் இன்று ஈடுபட்டார்.

யோகி ஆதித்யநாத்
பாஜக தலைமையிலான இந்த அரசு அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்கிறது. அனைவருக்கும் பாதுகாப்பை முழுமையாக கொடுத்து பாதுகாத்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் இதற்குமுன்பு நடந்த வன்முறை சம்பவங்கள் தற்போது நடப்பதில்லை. இங்கு கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு தீவிரவாதச் சம்பவமும் நடைபெறவில்லை. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது.

சமாஜ்வாதி
சமாஜ்வாதி கட்சியில் வேட்பாளர்களில் பாதிபேர் குண்டர்களுடன் தொடர்பு வைத்துள்ளார்கள். பலபேர் மீது வழக்குகள் உள்ளது. சமாஜ்வாதி கட்சி பயங்கரவாதிகளை பாதுகாக்கிறது. இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பினர் 38 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

முஜாகிதீன் அமைப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்ட 38 தீவிரவாதிகளில் ஒருவர் சஞ்சர்பூரை சேர்ந்தவர். அந்த பயங்கரவாதியின் தந்தை சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்புடையவர். சட்டசபை தேர்தலில் அந்த கட்சிக்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார். கடந்த ஆட்சியில் மதங்களை மையப்படுத்தியே செயல்பாடுகள் இருந்தது. ஆனால் பாஜக அனைவரையும் சமமாகப் பார்த்துவருகிறது'' என்று யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

அகமதாபாத் குண்டுவெடிப்பு
2008-ம் ஆண்டு அகமதாபாத் நகரில் 21 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இந்த 38 பேரில் ஒருவர் உத்தரப்பிரதேசம் சஞ்சர்பூரை சேர்ந்தவர். இந்நிலையில் இவரது தந்தை சமாஜ்வாதி கட்சியின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக பாஜக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications