பூமியின் காந்தப் புலத்தில் விரிசல்? இந்திய விஞ்ஞானிகள் தகவல்
பூமியின் காந்தப் புலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
டெல்லி: பூமியின் மீதுள்ள காந்தப்புலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பூமியின் காந்தப் புலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஊட்டியில் காஸ்மிக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் 'டாடா இன்ஸ்டியூட்டில் காஸ்மிக் கதிர் ஆய்வகம்' அமைந்துள்ளது. இந்த மையத்தில் அமைந்துள்ள கருவிகளில் பதிவான தகவல்களின் மூலமாகத்தான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
காந்தப்புல விரிசலின் பாதிப்புகள் கடந்த ஆண்டு உதகையில் உள்ள டாடா ஆய்வுக்கூடத்தில் பதிவாகியிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் தகவலின்படி, சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து பிளாஸ்மா கதிர்கள் பெரிய மேகம் போன்ற அளவில் வெளியேறியுள்ளது.
அப்பொழுது உண்டான அதிர்வில் இந்த மேகம் போன்ற அமைப்பானது அதிக வேகத்தில் பூமியின் மீது மோதியுள்ளது. இதனால் பூமியின் காந்தபுல அடுக்கு அதிக அளவில் அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக கடுமையான புவிகாந்த புயல் தோன்றியுள்ளது. இதனால் அதிகளவிலான காஸ்மிக் கதிர்கள் வெளியேறியுள்ளது. இந்த வெளியேற்றத்தின் காரணமாக பூமியின் காந்தபுலத்தில் விரிசல் உண்டாகியிருப்பதற்கான அடையாளங்கள் அங்குள்ள கருவிகளில் பதிவாகியுள்ளது என்ற விபரம் தற்போது தெரிய வருகிறது.
இதுகுறித்து பிரபல விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் கூறுகையில், " பூமியின் காந்தப்புலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மனிதர்களுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படாது. ஆனால் தொலைத்தொடர்பு உபகரணங்கள் பாதிக்கபடலாம். கடந்த 1886 ஆம் ஆண்டு காந்தபுலத்தில் விரிசல் ஏற்ப்பட்டது. அப்போது தந்தி கம்பங்கள் செயல் இழந்தன" என்று அவர் கூறினார்.