இந்த ஜெயலலிதா, சல்மான் எல்லாம் இந்த "மில்லியனர்களில்" ஒருத்தங்கதான்...!
டெல்லி: சல்மான் கானையும் சேர்த்தால் இந்தியாவில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருப்போரின் எண்ணிக்கை 22.2 மில்லியன் ஆகும். அதாவது 2.22 கோடிப் பேர் இந்தியாவில் பல்வேறு விதமான வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் நம்ம ஜெயலலிதாவும் ஒருவர்தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.
இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 1.85 கோடி ஆகும் இந்தியாஸ்பெண்ட் இணையதளத்தின் புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. இந்த வழக்குகள் அனைத்தும் கீழ்க் கோர்ட் முதல் உச்சநீதிமன்றம் வரை தேங்கியுள்ளவையாகும்.
கடந்த 13 வருடமாக சல்மான் கான் வழக்கும், அதற்கும் மேலாக ஜெயலலிதா வழக்கும் நடந்தது குறித்து பலரும் வாய் வலிக்கப் பேசி விட்டோம். ஆனால் நமது நீதிமன்றங்களில் விசாரணைக்காக தேங்கிக் கிடக்கும் வழக்குகளும், வழக்கு விசாரணைகளுக்கா கோர்ட்டுக்கும், வீட்டுக்குமாக நடந்து கொண்டிருப்போரையும் பார்த்தால் மலைத்துப் போய் விடுவோம்.
1.85 கோடி வழக்குகள்
இந்தியாவில் உச்சநீதிமன்றம் முதல் கீழ்க் கோர்ட் வரை மொத்தமாக 1.85 கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றனவாம். இவை கிரிமினல் வழக்குகள் மட்டும்தான். சிவில் வழக்குகள் வேறு கணக்கு.
2.22 கோடி பேர்
வழக்குகளில் சம்பந்தப்பட்டு கோர்ட்டுக்கும், வீட்டுக்குமாக நடந்து கொண்டிருப்போர் எண்ணிக்கை 2.22 கோடிப் பேர் ஆவர். இவர்களில் பெரும்பாலானோருக்கு பல வருடமாக வழக்கு இழுபறியாக இருக்கிறதாம்.
எது ஜாஸ்தி?
நாட்டிலேயே அதிக அளவில் நிலுவையில் உள்ள வழக்குகள் கலவரம் தொடர்பானவைதான். அதாவது மொத்தம் 25 லட்சத்து 43 ஆயிரத்து 918 பேர் இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். அடுத்த இடத்தை காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குவது,திருட்டு, கொலை, கடத்தல், கொள்ளை, பாலியல் பலாத்காரம், வரதட்சணைக் கொடுமை ஆகியவை வருகின்றன.
வக்கீல்கள் இல்லை, நீதிபதிகள் இல்லை
போதிய அளவில் வக்கீல்கள், நீதிபதிகள், கோர்ட்டுகள் இல்லாமையே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். இதுபோக வாய்தா வாங்குவது, கோர்ட் நடைமுறைகளில் ஏற்படும் தாமதங்கள் ஆகியவையும் தாமதத்திற்கு இன்னொரு காரணம்.
நெதர்லாந்து மக்கள் தொகையை விட ஜாஸ்தி
நெதர்லாந்து, கஜகஸ்தான் நாட்டு மக்கள் தொகையை விட நமது நாட்டில் வழக்கு விசாரணைகளில் சிக்கித் தவிப்போர் எண்ணிக்கை அதிகம் என்பது கவலைக்குரிய ஒன்றாகுமா்.
கிரிமினல் கேஸ்கள்
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 19 சதவீதம் கிரிமினல் வழக்குகள் ஆகும். 25 சதவீதம் செட்டில்ட் கேஸ்கள் ஆகும்.
உயர்நீதிமன்றங்களில்
உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 23 சதவீதம் கிரிமினல் வழக்குகள் ஆகும். மாவட்டம் மற்றும் பிற கோர்ட்டுகளில் உள்ளவற்றில் 67 சதவீதம் கிரிமினல் வழக்குகள் ஆகும்.
குவியும் வழக்குகள்
நிலுவையில் உள்ள வழக்குகளே கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் மேலும் மேலும் வழக்குகள் குவிவது நீதித்துறையை மலைக்க வைப்பதாக உள்ளது.
ஆயிரக்கணக்கில்
உச்சநீதிமன்றத்தில், கடந்த ஆண்டு 5466 புதிய வழக்குகள் போக அதற்கு முந்தைய ஆண்டு தேங்கிய 12,211 கிரிமினல் வழக்குகளும் சேர்ந்தனவாம். அதிக அளவிலான வழக்குகள், மாவட்ட நீதிமன்றங்களில்தான் குவிந்து கிடக்கின்றனவாம்.
நீதிபதிகள் போதாது
இந்தியாவில் தற்போது பத்து லட்சம் பேருக்கு 15 நீதிபதிக்தான் உள்ளனர். உலகிலேயே மிகவும் குறைந்த அளவிலான நீதிபதிகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் முக்கியமானது. உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் இடங்கள் 31 ஆகும். ஆனால் தற்போது இருப்பது 25 பேர்தான். உயர்நீதிமன்றங்களில் 906 இடங்களுக்கு 641 பேர்தான் பணியில் உள்ளனர்.