துருக்கிக்கு ‘அடி’ கொடுத்த இந்தியா.. உறவை கட் செய்கிறது இண்டிகோ ஏர்லைன்ஸ்! இன்னும் 3 மாதம் தான்!
டெல்லி: துருக்கி ஏர்லைன்ஸ் உடனான உறவை இண்டிகோ நிறுவனம் துண்டிக்க உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நடந்த இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததால் துருக்கி உடனான உறவை துண்டித்து வருகிறது இந்தியா.
பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்த துருக்கிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசாங்கம் இண்டிகோ நிறுவனத்தை துருக்கி ஏர்லைன்ஸுடனான விமான குத்தகை ஒப்பந்தத்தை 3 மாதங்களுக்குள் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் சேர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தன. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, ஆத்திரமடைந்த பாகிஸ்தான் இந்திய எல்லையில் உள்ள குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவம், டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவை தாக்க முயற்சி செய்தது. இந்தியா திறமையாக செயல்பட்டு பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது.
துருக்கி டிரோன்கள்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை மட்டுமே இந்தியா தாக்கியது. ஆனால், இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. துருக்கி நேரடியாகவே பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது. இந்தியாவை தாக்க பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள் துருக்கியில் இருந்து தயாரானவை என்பதும் தெரியவந்தது.
இதனால் இந்தியாவில் செயல்பட்டு வரும் துருக்கி நிறுவனங்களுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்திய விமான நிலைங்களில் செய்யப்பட்டு வந்த நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதியை திரும்பப் பெற்றது.
துருக்கி உடன் உறவு கட்
இந்த நிலையில் துருக்கி ஏர்லைன்ஸ் உடனான ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இண்டிகோ நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இண்டிகோ இரண்டு போயிங் 777-300 ER விமானங்களை துருக்கி ஏர்லைன்ஸிடம் இருந்து குத்தகைக்கு பெற்று இயக்கி வருகிறது. மே 31ஆம் தேதி வரை இந்த குத்தகைக்கான அவகாசம் உள்ளது.
ஆனால், இண்டிகோ நிறுவனம் மேலும் 6 மாதங்களுக்கு அனுமதி கேட்டுள்ளது. ஆனால், இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. இருந்தபோதிலும் உடனடியாக பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதால், 3 மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் அனுமதி அளிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இன்னும் 3 மாதங்கள் மட்டுமே
துருக்கி ஏர்லைன்ஸ் உடனான குத்தகையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்வதாகவும், அதன்பிறகு நீட்டிப்பைக் கோரப் போவதில்லை என்றும் இண்டிகோ உறுதிமொழி அளித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் இந்தியர்கள் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்வதை நிறுத்திக் கொண்டனர். கோடை விடுமுறை காலத்தில் துருக்கி நாட்டிற்கு செல்வதற்காக முன்கூட்டியே செய்திருந்த விமான டிக்கெட் மற்றும் தங்கும் இடத்திற்கான புக்கிங்கை பெரும்பாலான இந்திய சுற்றுலா பயணிகள் ரத்து செய்தனர். இதன் காரணமாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக துருக்கி நாட்டு துருக்கி ஏர்லைன்ஸின் பங்கு மதிப்பு ஒரே மாதத்தில் 10% வரை சரிவைச் சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications