ரஜினியின் "சிவாஜி" எபெக்ட்... எப்படியெல்லாம் வேலை செய்ய வைத்திருக்கிறது பாருங்கள்!
நிழல் உலக தாதாக்களான தாவூத் இப்ராகிம், அருண் காவ்லி பெயரில் மும்பைவாசிகளை பீதிக்குள்ளாக்கிய எஸ்.எம்.எஸ் விவகாரத்தில் ருசிகரமான தகவல் கிடைத்திருக்கிறது.
மும்பை: நிழல் உலக தாதாக்களான தாவூத் இப்ராகிம், அருண் காவ்லி பெயரில் மும்பைவாசிகளை பீதிக்குள்ளாக்கிய எஸ்.எம்.எஸ் விவகாரத்தில் ருசிகரமான தகவல் கிடைத்திருக்கிறது. அதுவும் ரஜினிகாந்தின் சிவாஜி திரைப்படத்தை முன்வைத்து இந்த ருசிகரம் அரங்கேறியுள்ளது.
மும்பை ஜேக்கப் சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ5 லட்சம் பணத்தை செலுத்தாவிட்டால் தாவூத் இப்ராகிம் கோபப்படுவார் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த எஸ்.எம்.எஸ்ஸை ஜேக்கப் சர்க்கிள்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதன்பின்னர் மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ10 லட்சம் பணத்தை செலுத்தாவிட்டால் அருண் காவ்லி கடுப்பாகிவிடுவார் என மிரட்டப்பட்டிருந்தது.

பணம் கேட்டு மிரட்டல்
இதென்னடா வம்பா போச்சு என ஜேக்கப் சர்க்கிள்வாசிகள் மும்பை போலீசில் புகார் செய்தனர். மும்பை போலீசாரும் எஸ்.எம்.எஸ். வந்த நம்பரை வைத்து ட்ரேக் செய்தனர்.

குஜராத்தில் இருந்து எஸ்எம்எஸ்
அப்போது குஜராத்தின் வாபியில் இருந்து இந்த எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. அத்துடன் அந்த எஸ்.எம்.எஸ்.-ல் கொடுக்கப்பட்ட அக்கவுண்ட்டும் போலியானது என தெரியவந்துள்ளது.

சிக்கிய பைரோஸ் கான்
இந்த எஸ்.எம்.எஸ்ஸை அனுப்பிய மொசின் பைரோஸ் கான் என்பவரை பிடித்து போலீஸ் விசாரித்தபோது ருசிகர தகவல்கள் வெளியாகின. பைரோஸ் கான் மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

பணம் கேட்டு எஸ்.எம்.எஸ்.
கடந்த 15 நாட்களுக்கு முன்னர் அவர் வேலையை விட்டு விலகினார். மளிகை கடையில் வேலை பார்த்த போது வாடிக்கையாளர்கள் சிலரது செல்போன்களும் மொசின் பைரோஸ் கானிடம் இருந்தது. அந்த எண்களுக்குத்தான் தாவூத் இப்ராகிம், அருண்காவ்லி பெயரில் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கிறார்.

ரஜினி ஸ்டைல்
இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது, ரஜினிகாந்த் நடித்த படத்தில் ஊழல் அதிகாரிகளை வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய சொல்வார். அதைப் பார்த்துதான் நானும் இப்படி ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். கொஞ்சம் கெத்தாக இருக்கட்டுமே என தாவூத், காவ்லி பெயரையும் கோர்த்துவிட்டேன். உண்மையில் பணம் வாங்கனும் என்பதற்காக செய்யவில்லை. ஒரு விளையாட்டுக்குத்தான் இப்படி செய்தேன் என கூறியிருக்கிறார். தற்போது பணம் கேட்டு மிரட்டியதாக மொசின் பைரோஸ் கான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications