ஐபிஎல் பிக்ஸிங்: கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்- சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஐபிஎல் பிக்ஸிங் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமெனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 6வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சில வீரர்களும் அணி நிர்வாகிகளும் பிக்ஸிங்கில் ஈடுபட்டு சிறைக்குப் போயினர். இவர்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகனாகிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பனும் ஒருவர்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதி முத்கல் தலைமையிலான விசாரணைக் குழுவை நியமித்தது. முத்கல் கமிட்டியும் தமது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் குருநாத் மெய்யப்பன், பிக்ஸிங்கில் ஈடுபட்டார் என்றும் கூறியிருந்தது.
இன்று முத்கல் கமிட்டி அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, பிக்ஸிங் புகார் குறித்து நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் எனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகாதவரை நேர்மையான விசாரணை நடைபெறாது. அவர் ஏன் அந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் சீனிவாசன் பதவி விலகவில்லை எனில் உச்சநீதிமன்றமே அவர் பதவி விலக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நாளை மறுநாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.