ஈராக்கில் ஹரியானா மாநிலத்தவர் 127 பேர் தத்தளிப்பு!
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 127 பேர் ஈராக்கில் தத்தளித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஹரியானா மாநில அரசு 24 மணி நேர உதவி மையம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிரான சன்னி முஸ்லிம்களின் உள்நாட்டுப் போர் உச்சமடைந்துள்ளது. ஈராக் நாட்டின் பல நகரங்கள் சன்னி முஸ்லிம்கள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். வசமாகி உள்ளன.
இந்த நகரங்களில் பணியாற்றி வந்த சுமார் 18 ஆயிரம் இந்தியர்களின் கதி கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கெனவே தெலுங்கானாவைச் சேர்ந்த 600 பேர் அங்கு சிக்கியிருப்பதாக கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 40 பேர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. இவர்களில் ஒருவர் தப்பி வந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் திக்ரீத் நகரில் தமிழகம், கேரள செவிலியர்கள் 46 பேர் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 127 பேர் ஈராக்கில் சிக்கியிருப்பதாக அம்மாநில அரசுக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தொடர்பு கொண்டு மாநில முதல்வர் ஹூடா, தத்தளிக்கும் ஹரியானா மாநிலத்தவரை மீட்க கோரினார்.
இதனிடையே ஹரியானா மாநில அரசும் 24 மணி நேர தொடர்பு மையம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மையத்தின் தொடர்பு எண்: 0172-5059197