அசோக் சிங்கால் மரணத்தை கொண்டாடிய ஐஎஸ்ஐஎஸ்.. காஷ்மீரில் கால்பதிக்க தொடர் முயற்சி
டெல்லி: விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர், அசோக் சிங்கால் மரணத்தை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 'நல்ல செய்தி' என்று கூறி கொண்டாடிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில், அதுவும் குறிப்பாக காஷ்மீரில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கால் பதிக்க முயன்றுவருவதாக கிடைத்துள்ள உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து தீவிரவாதிகளுடன் இந்தியாவிலிருந்து உரையாடுவோரின் இணையதள உரையாடல்களை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள் இடைமறித்து கேட்டபோது, சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசோக் சிங்கால் கடந்த 2015, நவம்பர் 17ம் தேதி மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து, சிராஜுதின் என்ற தீவிரவாதி தனது சகாக்களுக்கு அனுப்பிய தகவலில் "நல்ல செய்தி, அசோக் சிங்கால் மரணமடைந்தார்" என்று கூறப்பட்டிருந்ததாம்.
உரையாடல்களில், இந்தியா மீது அந்த தீவிரவாதிகளுக்கு மிகுந்த வெறுப்புணர்வு இருப்பதும் தெரியவந்தது. இந்தியா அரசியலமைப்புபடி இயங்க கூடாது, காலிபா ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமாக உள்ளதாம். இந்தியாவின் ஒவ்வொரு விவகாரங்களையும் அவர்கள் உரையாடியுள்ளது அம்பலமாகியுள்ளது. அசோக் சிங்கால் மரணத்தை பெரிய கொண்டாட்டமாக நடத்தியுள்ளனர் தீவிரவாதிகளும், அவர்களின் ஆதரவாளர்களும்.
இந்தியாவில் இருந்து நிறைய இளைஞர்களையும், பெண்களையும் தங்களது அமைப்பில் சேர்த்துக்கொள்ள ஐஎஸ்ஐஎஸ் துடியாய் துடித்துக்கொண்டுள்ளதும் இந்த உரையாடல்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக காஷ்மீரில் கால் பதிக்க எத்தனித்துக்கொண்டுள்ளது அந்த அமைப்பு. காஷ்மீரை காலிபா ஆட்சியின் கீழ்தான் கொண்டுவர வேண்டுமே தவிர பாகிஸ்தானிடம் கொடுக்க கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளனராம். காஷ்மீருக்கு தனி பணம் அச்சிடுவது வரை அவர்களது உரையாடல்கள் நீண்டுள்ளது.