26 நிமிடங்கள்... 20 செயற்கைக்கோள்கள்... வரலாறு படைத்த இஸ்ரோ!
ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 20 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டு, உரிய இலக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரோ மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது.
இதற்கு முன் கடந்த 2008ம் ஆண்டு பிஎஸ் எல்வி சி 9 ராக்கெட் மூலம் 10 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி இருந்தது இஸ்ரோ. தற்போது அந்தச் சாதனையை முறியடித்து 20 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.
இந்த 20 செயற்கைக்கோள்களில் இஸ்ரோவின் கார்டோசாட் -2 முக்கியமானது ஆகும். இது பூமியில் இருந்து 505 கிமீ தூரத்தில் நிலை நிறுத்தப்படுகிறது.
17 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள்...
இதுதவிர, அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்கள், கனடாவின் 2 மற்றும் ஜெர்மனி, இந்தோனேசியா, சத்யபாமா பல்கலைக்கழகம், புனே இன் ஜினியரிங் கல்லூரி போன்றவற்றின் செயற்கைக்கோள்கள் தலா ஒன்று இடம் பெற்றுள்ளன. இவற்றின் மொத்த எடை 560 கிலோ ஆகும்.
கார்டோசாட் - 2...
இஸ்ரோவின் கார்டோசாட் - 2 செயற்கைகோள் கடல்வழிப் போக்குவரத்து கண்காணிப்பு, வரைபடம், நீர்வள மேம்பாடு, நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு போன்றவற்றிற்கு பயன் தரும்.
ஜெர்மனி செயற்கைக்கோள்...
இஸ்ரோ இன்று முதன்முறையாக 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. இதற்கு முன் 57 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை அது ஏவியுள்ளது. கடந்த 1999ல் ஜெர்மனியின் செயற்கைக்கோளைத் தான், வெளிநாட்டு செயற்கைக்கோளாக முதன்முதலில் இஸ்ரோ விண்ணில் ஏவியது.
26 நிமிடங்களில்...
இந்த அனைத்து செயற்கைக்கோள்களும் 26 நிமிடத்தில் அதர்குரிய நிலைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பிஎஸ் எல்வி சி34 ராக்கெட் வெற்றி பெற்றுள்ளது. இதனால் உலக அரங்கில் இஸ்ரோவின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
குறைந்த செலவு...
மற்றநாடுகளை ஒப்பிடும் போது இந்தியா குறைந்த செலவில் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. இதனால், வெளிநாட்டுகள் இந்தியா மூலம் தங்களது செயற்கைக்கோள்களை அனுப்ப அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
பிஎஸ்எல்வி...
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த 35 ஆண்டுகளில் எவ்வளவோ செயற்கைக்கோள்கள் உயரே செலுத்தப்பட்டுள்ளன. இதில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் பெரும்பங்கு வகித்துள்ளது. அந்த ராக்கெட் 30 தடவை தொடர்ந்து வெற்றி கண்டு மிக நம்பகமான ராக்கெட் என்று பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆரியபட்டா...
இந்தியா முதன்முதலாகத் தயாரித்த ஆரியபட்டா செயற்கைக்கோள் 1975-ல் ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ரஷ்ய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டது. அந்த செயற்கைக்கோளின் எடை 360 கிலோ. அப்போது இந்தியாவிடம் எந்த ராக்கெட்டும் கிடையாது.
ரோகிணி...
இந்தியா முதல் முறையாக உருவாக்கிய எஸ்.எல்.வி-3 ராக்கெட் 1980-ம் ஆண்டில்தான் முதல் தடவையாக இந்திய மண்ணிலிருந்து ரோகிணி என்னும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக உயரே செலுத்தியது. ரோகிணி செயற்கைக்கோளின் எடை 35 கிலோ தான் என்பது குறிப்பிடத்தக்கது.
1288 கிலோ எடை...
ஆனால், இன்று 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் மொத்தம் 1,288 கிலோ எடைகொண்ட 20 செயற்கைக்கோள்களை ஏந்திச் சென்று, பிஎஸ்எல்வி சி34 புதிய சாதனை புரிந்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இன்று புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.