ரூ.13,860 கோடி கருப்பு பண விவகாரம்.. தலைமறைவான தொழிலதிபர் மகேஷ் ஷா அகமதாபாத்தில் கைது
குஜராத் ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷாவை வருமான வரித்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அகமதாபாத்: கணக்கில் வராத ரூ.13,860 கோடி பணத்தை தானாக முன்வந்து அரசுக்கு அறிவித்துவிட்டு தலைமறைவாகி இருந்த குஜராத் ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷாவை, வருமான வரித்துறை அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர்.
தானாக முன்வந்து கருப்பு பணத்தை அறிவிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அழைப்புவிடுத்திருந்தது. இந்த திட்டத்தின்கீழ், குஜராத்தை சேர்ந்த மகேஷ் ஷா என்ற ரியல் எஸ்டேட் அதிபர் தன்னிடம் கணக்கில் காட்டாத, ரூ.13,860 கோடி சொத்து இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து அகமதாபாத்திலுள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது அவரது வீட்டிலிருந்து பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வரிமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனிடையே மகேஷ் ஷா தலைமறைவாகி விட்டார். அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை மாலை அகமதாபாத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்த மகேஷ் ஷாவை வருவான வரித்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட மகேஷ் ஷா தன்னிடமுள்ள ரூ.13,860 கோடி பணம் தன்னுடையது இல்லை என்றும் பல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தன்னுடைய வீட்டில் வைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக கடந்த 2-3 வருடங்களாக வருட வருமானமாக ரூ.2 முதல் 3 லட்சம் வரையில் மட்டுமே கணக்கு காட்டி வந்துள்ளார் மகேஷ் ஷா. கடந்த மாதம் 29-ம் தேதி முதல் மகேஷ் ஷா தொடர்பில் இல்லை என்று அவரது பார்ட்னரான 90-வயதுடைய சேத்னா தெரிவித்திருந்தார். மும்பை, புனே, குஜராத் ஆகிய இடங்களில் நில விற்பனைத் தொழில் மகேஷ் ஷா ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அவர் வெளியிட்ட பணத்துக்கான வரித்தொகை ரூ.1560 கோடியை நவம்பர் 30-ம் தேதி மகேஷ் ஷா கட்டினார். ஆனால் அவரது உத்தரவாத பத்திரத்தை வருமானவரித்துறையினர் நவம்பர் 28-ம் தேதியே ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
மகேஷ் ஷா வீடுகள் உள்ளிட்ட 67 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 40 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.