மோடி பிரச்சாரத்தின் போது.. திடீரென பறந்த ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை.. நடந்தது என்ன?
காந்திநகர்: குஜராத் தேர்தல் பரப்புரையில் பிரதமர் ஈடுபட்டிருந்தபோது அனுமதியின்றி 'ட்ரோன்' ஒன்று பறந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் அதனை இயக்கியவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் வரும் 1ம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பரப்புரை
இந்நிலையில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பிரதமர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரை தேர்தல் பிரசாரத்திற்காக கட்சி களம் இறக்கியுள்ளது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக பவ்லாவில் நேற்று மாலை நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ட்ரோன் தடை
அதாவது பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், இக்கூட்டத்தில் 'ட்ரோன்' ஒன்று பறந்திருக்கிறது. இதனையடுத்து உஷாரான பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். மேலும் இந்த ட்ரோனை இயக்கியதாக மூன்று பேரையும் கைது செய்திருக்கின்றனர். பிரதமர் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ட்ரோன்கள் பறக்க ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.

கைது
இந்த சம்பவம் குறித்து அகமதாபாத் காவல்துறையினர் கூறியதாவது, "ட்ரோன் பறக்கவிட்டதற்காக நிகுல் ரமேஷ்பாய் பர்மர், ராகேஷ் கலுபாய் பர்வாத் மற்றும் ராஜேஷ்குமார் மங்கிலால் பிரஜாபதி என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் இவர்கள் வீடியோ எடுக்க இந்த ட்ரோனை பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. பிரதமர் பங்கேற்றுள்ள கூட்டத்தில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி ட்ரோனை பறக்கவிட்டதாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

பஞ்சாப்
ஏற்கெனவே கடந்த ஜனவரியில் பஞ்சாப் மாநில தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் ஃபெரோஸ்பூருக்கு சென்றிருந்தபோது வழியில் போராட்டக்காரர்கள் சிலர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் சாலை மேம்பாலத்தில் பிரதமர் சுமார் 20 நிமிடம் காத்திருக்க நேர்ந்தது. இதனையடுத்து அவர் ஃபெரோஸ்பூரில் பரப்புரை மேற்கொள்ளாமல் திரும்பி வந்துவிட்டார். இந்த சம்பவம் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடாக கருதப்பட்டது. இதனையடுத்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

தேர்தல்
இதில் ஃபெரோஸ்பூர் எஸ்எஸ்பிதான் இந்த பாதுகாப்பு குறைபாடுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது குஜராத்திலும் இதேபோல பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது மீண்டும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. குஜராத்தில் கடந்த முறை பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் அதன் வாக்கு வங்கி கணிசமான அளவில் குறைந்திருந்தது. இதனை பயன்படுத்தி இந்த முறை காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்று யோசித்து வருகிறது. இதனால் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications