ஆதார் எண்ணை அரசு துறைகளுக்கு தரவேண்டிய அவசியமில்லை - ஆதார் ஆணையம்
அரசுதுறைகளில் கேட்டால் கூட இனி மக்கள் ஆதார் எண்களை தரவேண்டிய கட்டாயமில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: ஆதார் எண்ணை அரசு துறைகளில் இனிமேல் தரவேண்டிய அவசியமில்லை என்றும், தேவைப்பட்டால் விர்ச்சுவல் ஐடியை கொடுத்துக்கொள்ளலாம் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிறப்பு முதல் இறப்பு வரை அனைவருக்கும் தேவைப்பட வேண்டிய ஒன்று தான் ஆதார் அட்டை என்று விளம்பரத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாள அட்டையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
இதற்கு பல பேர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதே சமயத்தில் தனி மனித ரகசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சொல்லி வந்ததால், இதற்கு மாற்று என்ன என்று யோசித்த மத்திய அரசு தற்போது புது திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.
அதன்படி, ஆதார் எண்ணுடன் ஒரு விர்ச்சுவல் ஐடியை கொடுக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஆதார் ஆணையத்தின் தலைமை செயலதிகாரி அஜய் பூஷன் பாண்டே, தனி மனித ரகசியத்தை காக்க, ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த மெய்நிகர் ஐடி எனப்படும் விர்ச்சுவல் ஐடி வழங்கப்படவுள்ளதாக கூறினார். அதாவது ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.
முதலில் ஆதாருக்கான இணையதளத்திற்கு சென்று, அதில்12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டால், தானாகவே 16 இலக்க எண்களை கொண்ட விர்ச்சுவல் ஐடி கிடைக்கும் என்றும் இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஆதார் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
ஒரு முறை இந்த விர்ச்சுவல் ஐடி பெற்று விட்டால், இனிமேல் சிம் கார்டு வாங்க, வங்கிக் கணக்கு துவங்க என்று ஆதார் கார்டு தேவைப்படும் இடங்களில் விர்ச்சுவல் அடையாள எண்ணை கொடுத்தாலே போதும். இதன் மூலம் தனி நபரின் ஆதார் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும் இந்த செயல்முறை வரும் மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.