கேரள மாநில பழமாகிறது ‘பலாப்பழம்‘ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்படவுள்ளது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்படவுள்ளது.
கேரள மாநிலத்திற்கென தனி விலங்கு, பறவை, மலர் மற்றும் மீனை தொடர்ந்து தற்போது அம்மாநில அரசு தனக்கென அதிகாரப்பூர்வ பழத்தை அறிவிக்கிறது.
பலாப்பழத்தை கேரள மாநில அரசு அதிகாரப்பூர்வ பழமாக அறிவிக்கவுள்ளது. பலாப்பழம் மற்றும் அது சார்ந்த உற்பத்தியால் கேரள அரசு ஆண்டுதோறும் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது.
அம்மாநில வேளாண்துறை கோரிக்கையை ஏற்று பலாப்பழத்தை வரும் 21 ஆம் தேதி அம்மாநில அதிகாரப்பூர்வ பழமாக கேரள அரசு அறிவிக்கவுள்ளது. மேலும் பலாப்பழத்தின் பயன்களையும் சத்துக்களையும் எடுத்துக்கூறி உள் மற்றும் வெளிநாடுகளில் பலாப்பழத்துக்கென சந்தைகளை ஏற்படுத்தவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக கேரள சட்டசபையில் அறிவிக்கவுள்ளதாகவும் கேரள வேளாண்துறை அமைச்சர் விஎஸ் சுனில் குமார் தெரிவித்துள்ளார். ஜாக்ஃபுரூட் ஃபெஸ்ட் என்ற பெயரில் பலாப்பழதை பிரபலப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கேரளாவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.