பாஜகவிடம் கேட்கத்தான் முடியும்.. உத்தரவிடவெல்லாம் முடியாது.. ஜெகன் மோகன் ரெட்டி
அமராவதி: பாஜக இப்போது இருக்கும் நிலையில் ஆந்திராவுக்கு உதவிதான் கேட்க முடியும் உத்தரவிடமுடியாது என ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. இதில் ஆளும் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 151 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. அதோடு நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 இடங்களை கைப்பற்றியது.
இந்நிலையில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும், மாநிலத்தின் கடன் சுமையை தீர்க்கவும் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் ஆந்திர மாநிலம் கடனில் சிக்கி தவிக்கிறது, ஆகவே கடனில் சிக்கியுள்ள மாநிலத்தை மீட்க உதவுமாறு கோரினேன். மாநிலத்தைப் பிரிக்கும் போது ரூ.97 ஆயிரம் கோடி கடன் 5 ஆண்டுகளில் ரூ.2.58லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.
வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலுத்துகிறோம். ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வட்டி செலுத்துகிறோம். இந்த நிலையை எடுத்துக்கூறி எங்கள் மாநிலத்தை மீட்கக் கோரி உதவி கேட்டேன். அதோடு ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் நிலையில் இப்போது பாஜக இல்லை. ஆகவே உதவி மட்டும்தான் கேட்டுவிட்டு வந்தேன்.
இதுதான் பழிக்குபழி.. சந்திரபாபுவின் கோட்டையை சரித்த ரோஜா.. ஆந்திராவின் கேம் சேஞ்சரான கதை!
மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு 250 இடங்களுக்கு மேல் கிடைக்க கூடாது என்று இறைவனை வேண்டினேன். ஆனால் பாஜகவுக்கு 300 இடங்களுக்கு மேல் கிடைத்து விட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வென்றுள்ளது. ஒருவேளை பாஜக 250 இடங்களில் மட்டும் வென்றிருந்தால் ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து பெறும் உத்தரவில் கையெழுத்து வாங்கி விட்டு அதன் பின்னர் ஆந்திர முதல்வராக பதவி ஏற்றிருப்பேன். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது என்று ஜெகன் கூறினார்.
இது குறித்து மேலும் பேசிய அவர் பெருந்தன்மையோடு ஆந்திர மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் விடுத்த கோரிக்கையை அவர் பொறுமையாக கேட்டுக் கொண்டார். அது மகிழ்ச்சியை தருகிறது ஒருநாள் அனைத்தும் நல்லவிதமாக நடக்கும் என்று நம்புகிறேன் என்றும் ஜெகன் கூறினார்.