மக்கள் தர்பார் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு கெஜ்ரிவால் பாதியில் வெளியேறினார்
டெல்லி: மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு காணப்பட்டதால், அந்த நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஆட்சிப் பொறுப்பேற்றதும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மின் கட்டண சலுகை அளித்ததோடு, அனைத்து வீடுகளுக்கும் இலவச குடிநீர் விநியோகிக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்துவரும் அவர், சனிக்கிழமை தோறும் அமைச்சர்கள் அனைவரும் மக்களின் குறைகளை கேட்டறிவார்கள் என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
அதேபோல வார நாட்களிலும் ஒரு அமைச்சர் மக்களின் குறைகளை கேட்டறிவார் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி முதல் மக்கள் சபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. முதல்வர் கெஜ்ரிவால் நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
டெல்லி தலைமைச் செயலகத்தின் வெளியே நடைபெற்று வரும் இந்த மக்கள் சபைக் கூட்டத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதையொட்டி தலைமைச் செயலகத்திற்கு செல்லும் சாலையில் பாதசாரிகள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
சட்டப்பேரவை எதிரே குறைகளை தெரிவிக்க ஏராளமானோர் கூடியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கெஜ்ரிவாலின் பாதுகாப்பு கருதி, அவரது ஆதரவாளர்கல் கெஜ்ரிவாலை உள்ளே அழைத்துச் சென்றனர்.
கெஜ்ரிவால் மன்னிப்பு
பின்னர் தலைமைச் செயலகத்தின் மாடிக்கு வந்த கெஜ்ரிவால், அங்கிருந்தபடியே பொதுமக்களை பார்த்து பேசினார். அப்போது நிர்வாக குறைபாடு காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டுவிட்டதாகவும், இதற்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் கூறிய அவர், உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் வரை 5 அல்லது 6 நாட்களுக்கு மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறாது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் இன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்க வந்த மக்களிடம், மற்ற அமைச்சர்கள் மனுக்களை பெற்று குறைகளை கேட்டு வருகின்றனர்.
கிரண்பேடி விமர்சனம்
இதனிடையே கெஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும் தலைமை செயலகத்தின் மாடியில் நின்றபடி மக்களிடம் பேசியதை விமர்சித்துள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், ஹசாரே குழுவைச் சேர்ந்தவருமான கிரண் பேடி, "கெஜ்ரிவாலும் அவரது குழுவினரும் தலைமைச் செயலகத்தை மொட்டை மாடியில் வைத்து நடத்துகின்றனர். தயவு செய்து நன்றாக கவனித்து,உள்வாங்கிக்கொள்ளுங்கள்; அதன்பின்னர் முடிவுகள் எடுப்பதை பரிசீலியுங்கள்" எனக் கூறியுள்ளார்.