ராஜ்யசபாவை முடக்கிய ஜனதா கட்சிகள்! டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்!
டெல்லி: சமாஜ்வாடி உள்ளிட்ட 6 ஜனதா கட்சிகள் ஒன்றிணைந்து இன்று ராஜ்யசபா நடவடிக்கைகளை முடக்கின. அதன் பின்னர் டெல்லி ஜந்தர் மந்தரில் 6 கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
பாரதிய ஜனதாவுக்கு எதிராக சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட 6 ஜனதா கட்சிகள் ஒரே கட்சியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 6 கட்சிகளும் ஒன்றிணைந்து டெல்லியில் இன்று மத்திய அரசைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தன.
இதனடிப்படையில் மத்திய அரசுக்கு எதிராக ராஜ்யசபாவில் 6 கட்சிகளின் எம்.பி.க்களின் ஒருங்கிணைந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக ஜந்தர் மந்தர் நோக்கி சென்ற 6 கட்சித் தலைவர்களும் அங்கு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு தலைமை வகித்த பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார், கருப்புப் பண மீட்பு உட்பட மோடி அரசு கொடுத்த வாக்குறுதி எதனையும் காப்பாற்றவில்லை என்று சாடினார்.