டேராடூன் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ராணுவ வீரர் வெறிச் செயல்..துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர் பலி.
டேராடூன் : புகழ் பெற்ற லால் பகதூர் சாஸ்திரி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு வீரர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் லால் பகதூர் சாஸ்திரி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. குடிமைப் பணி தேர்வில் ஐ.ஏ.எஸ். தேர்வானவர்களுக்கு இங்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
அந்த மையத்தில் இந்தோ திபெத் எல்லை காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை (வெள்ளிக் கிழமை) சந்திரசேகர் என்ற வீரருக்கும், சக வீரர்களான சுரேந்தர் மற்றும் அக்தர் ஹுசைன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதமாக முற்றியது.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் தான் வைத்திருந்த இலகு ரக தானியங்கி துப்பாக்கியால் சுரேந்தர் மற்றும் அக்தரை நோக்கி சுட்டார்.
இதில் சுரேந்தர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அக்தர் ஹுசைன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்திரசேகர் பயிற்சி மையம் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்று பதுங்கியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரது கையில் தானியங்கித் துப்பாக்கி உள்ளதால், போலீசார் மிகுந்த கவனத்துடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்திரசேகர் மீது நேற்று முன்தினம் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஐ.ஏ.எஸ். அகாடமியில் பாதுகாப்பு பணியில் இருந்த அனைத்து வீரர்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்தோ திபெத் எல்லை காவல் படை இயக்குநர் ஜெனரல் கிருஷ்ண சவுத்ரி தெரிவித்துள்ளார்.