உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்... ஜெயலலிதாவே முடிவு செய்வார்: ராம் ஜெத்மலானி
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஜெயலலிதாவிற்கு பெங்களூர் உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் எப்போது மனுத்தாக்கல் செய்வது என்பது குறித்து தனது கட்சிக்காரரே முடிவு செய்வார் எனத் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி.
18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது பெங்களூர் நீதிமன்றம். அதன்படி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது. தீர்ப்பை அடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் ஜெயலலிதா.
அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று நீதிபதி சந்திரசேகரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார்.
தனது வாதத்தில், ‘ஜெயலலிதாவிற்கு 66 வயதாகிறது என்றும், அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளது எனவும் வாதிட்ட ஜெத்மலானி, உச்சநீதிமன்றம் லாலுவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியதை முன்மாதிரியாக கொண்டு ஜெயலலிதாவையும் ஜாமினில் விடுதலை செய்யவேண்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞரும் ஜெயலலிதாவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கலாம் என்றும் ஜெத்மலானி தெரிவித்தார்.
ஆனால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு சரியானது என்று கூறி ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை நிராகரித்தார் நீதிபதி சந்திரசேகரா. இதனால் அதிமுகவினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், இத்தீர்ப்பு குறித்து ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறுகையில், ‘உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு ஏமாற்றமளிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் எப்போது, எவ்வாறு முறையிடுவது என்பதை எனது கட்சிக்காரர் முடிவு செய்வார்' எனத் தெரிவித்துள்ளார்.