ரூ.5 கோடியில் 21 சொகுசு பங்களாக்களா? சொத்து குவிப்பு வழக்கில் பரபர இறுதிவாதம்-ஜெ.வுக்கு கோர்ட் செக்
டெல்லி: ரூ5 கோடியில் 21 சொகுசு பங்களாக்களை கட்ட முடியும் என்பதை நம்பவே முடியவில்லை என சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் இறுதிவாதத்தில் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்தார்.
இந்த விசாரணையை இழுத்தடிக்கும் வகையில் ஒரு வார கால அவகாசம் கோரிய ஜெயலலிதாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துவிட்டது.
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து கர்நாடக அரசும் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஜெயலலிதா தரப்பினர் பதில் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 2-ந் தேதி முதல் நாள்தோறும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான பினாகி சந்திர கோஷ், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதால் ஒரு வார காலம் ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை கர்நாடகா அரசு அப்போது எதிர்க்கவில்லை. இதனால் ஜெயலலிதாவின் கோரிக்கை ஏற்கப்பட்டு பிப்ரவரி 23-ந் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே மீண்டும் விசாரணையை மேலும் ஒருவாரம் தள்ளி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் ஜெ. தரப்பு மனு தாக்கல் செய்தது. ஆனால் இதற்கு கர்நாடகா அரசு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை திட்டமிட்டு இழுத்தடிக்கும் முயற்சியாகத்தான் இந்த அவகாசம் கோரப்படுகிறது; ஆகையால் இதனை நிராகரிக்க வேண்டும் என கர்நாடகா தமது பதிலைத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கை ஒரு வார காலம் ஒத்திவைக்கக் கோரிய ஜெயலலிதாவின் கோரிக்கையை நீதிபதிகள் அதிரடியாக நிராகரித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தம்முடைய இறுதிவாதத்தை தொடங்கினார். அப்போது, இறுதிவாதத்தை நிறைவு செய்ய 3 நாட்கள் தேவை என தவே குறிப்பிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்திருப்பது ஜெயலலிதா தரப்புக்கு பெரும் பின்னடைவாகும்.
இன்றைய இறுதிவாதத்தின் போது, ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்; ஜெயலலிதாவுக்கு விசாரணை நீதிமன்றம் சிறை தண்டனை அளித்து வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என தவே வாதிட்டார்.
மேலும் ரூ5 கோடியில் 21 சொகுசு பங்களாக்களை கட்டினோம் என்பதை நம்ப முடியவில்லை; அதேபோல் நமது எம்ஜிஆர் நாளேட்டுக்கு ரூ14 கோடி சந்தா மூலம் சேர்க்கப்பட்டதும் நம்பும்படியாக இல்லை; தற்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் பிறந்த நாள் பரிசாக பல கோடி ரூபாய் பெற்றோம் எனக் கூறுவதை ஒரு பேஷனாகவே வைத்திருக்கிறார்கள் என்றார்.
அத்துடன் சசிகலா, இளவரசி, சுதாககரன் ஆகியோரும் இந்த சதியின் உடந்தை என்பதால்தானே அவர்களை தம்முடைய வீட்டில் தங்க ஜெயலலிதா அனுமதித்துள்ளார் என்றும் தவே சுட்டிக்காட்டினார்.
இவ்வழக்கின் விசாரணை நாளை பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளைய விசாரணையை அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி புறக்கணிக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் அனைத்து தரப்பும் சாட்சிகள் பட்டியலைத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.