ஜெ. சிறையில் இருந்தபோது அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது ஏன்? நீதிபதி சரமாரி கேள்வி
பெங்களூரு: ஜெயலலிதா சிறையில் இருந்த காலகட்டத்தில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது ஏன் என்று சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையை நடத்திவரும் கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மேல்முறையீடு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது.
மூத்த வக்கீல் வரவழைப்பு
மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 10வது நாளாக நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பில் முதலில் வழக்கறிஞர் குமார் ஆஜராகினார். பிறகு டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வரவழைக்கப்பட்டு, ஜெயலலிதா சார்பில் ஆஜராகிவருகிறார். நாகேஸ்வரராவ், இன்று 5வது நாளாக வாதம் செய்தார்.
ஜெயலலிதா வீட்டில் சோதனை
அப்போது அவர், ''சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டின்கீழ் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலகட்டத்தில், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியுள்ளது. எனவே சொத்து மதிப்பு சரியாக கணக்கிடப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. சம்மந்தப்பட்டவர்கள் வீட்டில் இல்லாதபோது சோதனை நடத்தியது தவறு" என்றார்.
நீதிபதி சரமாரி கேள்வி
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி குமாரசாமி, "குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் வீட்டில் சோதனை நடத்தும்போது, அந்த நபரும் உடன் இருக்க வேண்டும் என்று, இதற்கு முன்பு, பல வழக்குளின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆனாலும், ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அவரது வீட்டில் சோதனை நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாத போது, எவ்வாறு சோதனை நடத்தப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினர்.
பவானிசிங் பதில்
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வக்கீல் பவானிசிங், "லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை குறித்து ஜெயலலிதாவுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. ஜெயலலிதாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தியபோது, ஜெயலலிதா தரப்பில், பாஸ்கர் என்பவர் வீட்டில் இருந்தார்" என்று கூறினார்.
அடிப்படையை ஆராயும் ஜெ. தரப்பு
சொத்துக் குவிப்பு விசாரணை நடந்த விதம் குறித்து நாகேஸ்வரராவ் தொடர்ந்து வினா எழுப்பிவருகிறார். நேற்று அவர் வாதிடுகையில், "ஜெயலலிதாவுக்கு சொந்தமான, நிலம், கட்டிடங்கள் குறித்து தவறாக மதிப்பிடப் பட்டுள்ளது. போயஸ் தோட்டம், திராட்சைத்தோட்டத்தின் மதிப்பை தவறாக கணக்கிட்டுள்ளனர்'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.