லட்சக்கணக்கான தொண்டர்கள் இருந்தும் தனிமையில் இருப்பதாக சொன்ன பெரியம்மா ஜெயலலிதா- நெகிழும் அமிர்தா
ஜெயலலிதாவை பெரியம்மா என அழைக்கும் அமிர்தா பெங்களூர் மிர்ரர் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். தாம் கடைசியாக ஜெயலலிதாவை சந்தித்தபோது தனிமையில் உணர்வதாக கூறியதாக அமிர்தா தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: லட்சக்கணக்கான தொண்டர்கள் இருந்தும் தாம் தனிமையில் இருப்பதாக மறைந்த ஜெயலலிதா கூறியதாக அவரது தங்கை எனக் கூறிக் கொள்ளும் பெங்களூர் சைலஜாவின் மகள் அமிர்தா கூறியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த சைலஜா தம்மை ஜெயலலிதாவின் தங்கை கூறிவந்தார். அவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். சைலஜாவின் மகள் அமிர்தா பெங்களூர் மிர்ரர் ஏட்டுக்கு அளித்த பேட்டியில் பெரியம்மா ஜெயலலிதா குறித்து கூறியுள்ளதாவது:
1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் 3 முறை ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறேன். முன்னதாக நாங்கள் போயஸ் கார்டன் சென்று வந்திருக்கிறோம். ஆனால் சசிகலா கை ஓங்கிய பின்னர் தம்முடைய உறவினர்களை தலைமைச் செயலகத்திதான் ஜெயலலிதா சந்தித்தார்.
பேட்டிக்கு அதிருப்தி
ஜெயலலிதா தம்முடைய உறவுகளைப் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்வதை விரும்பவில்லை. என்னுடைய அம்மா பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்ததையும் பெரியம்மா ஜெயலலிதா விரும்பவில்லை. பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்க வேண்டாம் எனவும் பெரியம்மா ஜெயலலிதா என் அம்மாவிடம் கூறியிருந்தார்.
2014-ல் கடைசி சந்திப்பு
2014-ம் ஆண்டு ஜூன் மாதம்தான் பெரியம்மா ஜெயலலிதாவை கடைசியாக சந்தித்தேன்... அந்த கடைசி உரையாடலை நான் மறக்க முடியாது.. நாங்கள் கன்னடத்தில்தான் வழக்கமாக பேசிக் கொள்வோம்.
தனிமையில்...
அப்போது, லட்சக்கணக்கான தொண்டர்கள் எனக்கு இருக்கிறார்கள்... ஆனாலும் நான் தனிமையில் இருப்பதாகவே உணருகிறேன். ஜெயலலிதாவுக்கு என்ன பாதிப்பு இருந்தது என தெரியவில்லை. அவருக்கு என்ன சிகிச்சை கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை.
என்னையும் அனுமதிக்கவில்லை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கூட அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை. நானும் மருத்துவமனைக்குப் போயிருந்தேன். ஆனால் என்னை மருத்துவமனை வாசலிலேயே போலீசார் நிறுத்திவிட்டனர். ஒருபோதும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவை யாருமே சந்திக்க அனுமதிக்காமல் இருந்தது ரொம்பவே வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அமிர்தா பேட்டியளித்துள்ளார்.