இப்படி கேவலமாக பேசுறாங்களே... சிஎம் ஹேமந்த் சோரனின் அண்ணி பாஜக வேட்பாளரான சீதா சோரன் கதறல்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான இர்பான் அன்சாரி, கணவரை இழந்த பெண் என்றும் பார்க்காமல் இழிவாகவும் கேவலமாகவும் விமர்சித்து பேசுகிறார் என செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு கதறி அழுதது கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில அரசிடம் பழங்குடிகள் ஆணையம் விளக்க அறிக்கையும் கேட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்க போராடுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறது.

ஜார்க்கண்ட் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக வேட்பாளரான சீதா சோரன் தம்மை அமைச்சர் இர்பான் அன்சாரி மிக கேவலமாக விமர்சித்து பேசியிருப்பதாக செய்தியாளர்களிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதார். முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணியார்தான் சீதா சோரன். ஹேமந்த் சோரன் சிறைக்கு போன போது முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் பாஜகவுக்கு தாவிய சீதா சோரன் தற்போது தேர்தலில் களம் காண்கிறார். சீதா சோரனின் இந்த கண்ணீர் கதறல், ஜார்க்கண்ட் தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக பழங்குடிகள் ஆணையம் ஜார்க்கண்ட் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதனிடையே ஜார்க்கண்ட் அமைச்சர் இர்பான் அன்சாரியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தி உள்ளார். மேலும் இர்பான் அன்சாரிக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம் எனவும் பாஜக அறிவித்துள்ளது. இதனால் ஜார்க்கண்ட் தேர்தல் களம் பரபரப்பின் உச்சத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications