பத்திரிகையாளர் கொலையில் பாஜக முன்னாள் அமைச்சரின் மகனுக்கு தொடர்பு?
அகமதாபாத்: குஜராத்தில் செயல்பட்டு வரும் ஜெய் ஹிந் சஞ் பத்திரையின் செய்தியாளர் கிஷோர் தவே கொலை செய்யப்பட்டத்தில் குஜராத் முன்னாள் அமைச்சரின் மகனான பவேஷ் சுரேஜாவின் கைவரிசை இருப்பதாக கொலை செய்யப்பட்ட கிஷோரின் சகோதரர் பிரகாஷ் புகார் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது ஜெய் ஹிந் சஞ் என்ற பத்திரிகையின் அலுவலகம். இந்தப் பத்திரிகையில் செய்தியாளராக பணி புரிந்து வந்தார் கிஷோர் தவே. நேற்று அவரது பத்திரிகை அலுவலகத்திலேயே அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து அவரது வீட்டார் புகார் தெரிவித்ததையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் நீர்வளத்துறையின் அமைச்சராக இருந்த ரதி சுரேஜாவின் மகனான பவேஷ் சுரேஜாவிற்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக கிஷோர் தவேயின் சகோதரர் பிரகாஷ் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், சில நாட்களுக்கு முன், கிளினிக் ஒன்றில் பெண் ஒருவரை சில்மிஷம் செய்த பவேஷ் சுரேஜா குறித்த செய்தியை கிஷோர் வெளியிட்டிருந்தார் என்றும் அதனைத் தொடர்ந்து பவேஷ் சுரேஜாவிடம் இருந்து கொலை மிரட்டல்கள் கிஷோருக்கு வந்து கொண்டே இருந்தது என்றும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த கொலையும் நடந்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே ஆம் ஆத்மி கட்சியினர், பத்திரிகையாளர் கிஷோரின் கொலையை கண்டித்து அகமதாபாத்தில் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.