சொத்துக்குவிப்பு வழக்கு.. சசிகலா சீராய்வு மனு விசாரணை அமர்விலிருந்து தானாக விலகிய நீதிபதி!
டெல்லி: சசிகலாவின் சீராய்வு மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வில் இருந்து ரோகின்டன் நாரிமன் தானாக முன்வந்து விலகியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 வருட சிறை தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் 1.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் திருத்தப்பட்ட பட்டியல் இன்று வெளியானது.
அப்போது சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
இதற்கு காரணம், நீதிபதிகள் அமர்வில் ஏற்பட்ட மாற்றம்தானாம். சசிகலாவின் சீராய்வு மனுவை நீதிபதிகள் அமிதவராய் கோஷ், ரோஹின்டன் நாரிமன் அமர்வு இன்று விசாரிக்கவிருந்தது.
ஆனால், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர், முகுல் ரோதக்கி நேற்று, நீதிபதி ரோஹின்டன் நாரிமனை சந்தித்து, இந்த அமர்வில் அவர் இருக்க கூடாது என கேட்டுக்கொண்டார்.
ரோஹிண்டன் நாரிமனின் தந்தை பாலி நாரிமன் (காவிரி வழக்கில் கர்நாடகாவிற்காக ஆஜராகுபவர்) ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா-சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்புக்காக ஆஜரானவர். இதனால் ரோதக்கி இவ்வாறு வேண்டுகோள்விடுத்தார்.
தார்மீக அடிப்படையில் இக்கோரிக்கையை அவர்விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட ரோஹிண்டன் நாரிமன், இவ்வழக்கிலிருந்து தன்னைவிடுவித்துக்கொண்டுள்ளார்.