தேசிய கபடி வீரர் பட்டப்பகலில் சுட்டு கொலை.. தலையை குறிபார்த்து சுடும் காட்சி சிசிடிவியில் பதிவு
சண்டிகர்: இந்திய தேசிய கபடி அணியில் விளையாடிய சுக்வீந்தர் சிங் அடையாளம் தெரியாத இரு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள், பல ரவுண்டுகள் சுடும் காட்சி சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோட்டக் நகரையடுத்த ரித்வால் கிராமத்தை சேர்ந்தவர் சுக்வீந்தர் சிங் (24). இந்திய தேசிய அணிக்காக விளையாடும் கபடி வீரராகும்.
சுக்வீந்தர் சிங் நேற்று விளையாட்டு பயிற்சி முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணையில் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகள் சிக்கியுள்ளன. சுக்வீந்தர் சிங், செல்போனில் பேசியபடியே வீட்டுக்கு நடந்து செல்வதும், எதிர்புறமாக ஸ்கூட்டரில் இருவர் வருவதும், அதில் பின்னால் உட்கார்ந்திருந்தவன், சுக்வீந்தர் சிங்கின் நெஞ்சை பார்த்து சுடுவதும் பதிவாகியுள்ளது.
சுருண்டு விழுந்த சுக்வீந்தர் சிங்கை நெருங்கும் அந்த இருவரும், அவரது தலையில் மாறி மாறி சுடுகிறார்கள். சுக்வீந்தர் சிங் துடிதுடித்து பலியாகிறார். இந்த காட்சிகள் சிசிடிவி ஃபுட்டேஜில் பதிவாகியுள்ளது.
கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். யாரிடமும் சுக்வீந்தர் சிங்க்கு தனிப்பட்ட விரோதம் இல்லையென்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.