தமிழக எல்லையில் கன்னட பள்ளிகளை மூடியதை எதிர்த்து பந்த்.. வாட்டாள் அறிவிப்பு
பெங்களூரு: தமிழக எல்லையில் உள்ள கன்னடப் பள்ளிகளை தமிழக அரசு மூடியுள்ளதை எதிர்த்து ஜனவரி 21ம் தேதி சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் பந்த் நடத்தப்படும் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவரான வாட்டாள் நாகரா் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடக எல்லையான சாம்ராஜ்நகரை ஒட்டி உள்ள தமிழக எல்லையில் பல ஆண்டுகளாக கன்னட ஆரம்பப்பள்ளிகள் செயல்பட்டு வந்தன. ஆனால், இந்த பள்ளிகளை மூடிவிட்டு, இங்கு பணியாற்றிய கன்னட மொழி ஆசிரியர்களை தமிழக அரசு வீட்டுக்கு அனுப்பி உள்ளது.
தமிழக எல்லையில் உள்ள தாளவாடியில் தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள கன்னட வழி பள்ளியில் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் படித்து வந்தனர். கன்னட பள்ளிகளை மூடிவிட்டு இங்கு தமிழ் பள்ளிகளை தமிழக அரசு துவங்கி உள்ளது.
தமிழக அரசின் இத்தகைய துரோக செயல் கண்டனத்துக்குரியது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வரும் 21ம் தேதி சாம்ராஜ்நகர் எல்லையில் பந்த் போராட்டம் நடத்தப்படும் என்றார் வாட்டாள்.