கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைந்தால், ம.ஜ.த ஆதரவு பாஜகவுக்கா, காங்கிரசுக்கா?
சித்தராமையாவை முதல்வராக்க கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரசுக்கு மஜத ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும், இதைத்தான் காங்கிரசில் உள்ள பிற தலைவர்களும் விரும்புவார்கள் எனவும் கூறுகிறார் சந்தீப் சாஸ்திரி.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைந்தால், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி ஆதரவு பாஜகவுக்கா அல்லது காங்கிரசுக்கா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இந்தியா டுடே, ஏபிபி டிவி போன்றவை கர்நாடக சட்டசபை தேர்தல் பற்றிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன. அதில் தொங்கு சட்டசபை அமையும் வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது.
ஜெயின் பல்கலைக்கழகம், லோக்நீதி, சிஎஸ்டிஎஸ் சர்வேயும் இதையே கூறுகிறது. இந்தியா டுடே தவிர்த்த இவ்விரு கருத்து கணிப்புகளும், பாஜக தனிப்பெரும் கட்சியாக வரும் என்றும், இந்தியா டுடேவோ, காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வரும் என்றும் கூறியுள்ளன.
மஜத கிங்மேக்கர்
3வது பெரிய கட்சியாக மதசார்பற்ற ஜனதாதளம் வெற்றி பெறும் என்பதும் கணிப்பு. எனவே ஆட்சியமைப்பதில் மஜத கட்சிதான், கிங் மேக்கராக இருக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பு. ஆனால், தேவகவுடாவின் மஜத எந்த கட்சிக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டும் என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வி. ஏற்கனவே தரம்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்த மஜத, பின்னர், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தரம்சிங் அரசை கலைத்து ஆட்சியை கைப்பற்றியதும் வரலாறு.
பாஜகவுடன் நெருடல்
இரு கட்சிகளுடன் மஜத கூட்டணி அமைத்திருந்தாலும், கொள்கை ரீதியாக தேவகவுடாவிற்கு பாஜகவைவிட காங்கிரசே நண்பன். பாஜகவுடன் கூட்டணி அமைத்து 2006ம் ஆண்டு, மஜத ஆட்சி அமைத்தபோது தனது மகன் குமாரசாமி முதல்வராக பதவியேற்ற விழாவை கூட புறக்கணித்தவர்தான் தேவகவுடா. மறைமுகமாக இந்த ஆட்சிக்கு சம்மதித்தாலும், மதசார்பற்ற கட்சி என்ற பெயரை வைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைப்பதா என்பதே அப்போது தேவகவுடாவின் வெளிப்படையான கேள்வியாக இருந்தது. ஆனால், காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதிலும் மஜதவுக்கு இப்போது ஒரு பெரும் சிக்கல் உள்ளது.
சித்தராமையா சிக்கல்
காங்கிரஸ் கட்சி சார்பில் சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளனர். சித்தராமையா, மஜத கட்சியிலிருந்து தேவகவுடாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸ் சென்றவர். இருவருக்கும் ஜென்ம பகை. இதுதான் காங்கிரசுக்கு ஆதரவு கரம் நீட்டுவதில் மஜதவுக்கு இருக்கும் தயக்கத்திற்கு காரணம். காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வென்றால், அக்கட்சிக்கு மஜத ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது என்று 'ஒன்இந்தியாவிடம்' தெரிவிக்கிறார், பெங்களூரை சேர்ந்த அரசியல் பார்வையாளர் டாக்டர். சந்தீப் சாஸ்திரி.
அரசியல் பார்வையாளர்
சித்தராமையாவை முதல்வராக்க கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரசுக்கு மஜத ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும், இதைத்தான் காங்கிரசில் உள்ள பிற தலைவர்களும் விரும்புவார்கள் எனவும் கூறுகிறார் சந்தீப் சாஸ்திரி. சித்தராமையா வேறு கட்சியில் இருந்து வந்தவர் என்பதால், அவருக்கு முதல்வர் பதவி போனதில், காங்கிரஸ் சீனியர் அமைச்சர்கள் சிலர் அதிருப்தியுள்ளதை சுட்டிக் காட்டும் அவர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி சீனியர்களில் ஒருவர் முதல்வராக முயல்வார்கள் என்கிறார்.
மஜத ஆதரவு யாருக்கு
ஒருவேளை பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்றால், தேவகவுடா, தனது மூத்த மகன் ரேவண்ணாவுக்கு, துணை முதல்வர் பதவி கேட்க வாய்ப்புள்ளது என்கிறார் சந்தீப் சாஸ்திரி. ஆனால், மஜதவை சமாளிப்பதை விட சுயேச்சைகளை ஈர்த்து ஆட்சியமைப்பதையே பாஜக விரும்பும் என்றும், எதுவாக இருந்தாலும் பெரும்பான்மைக்கு தேவையான, 113 எம்எல்ஏக்கள் என்ற மாஜிக் நம்பரின் அருகில் எந்த கட்சி வருகிறது, எத்தனை சுயேச்சைகள் வெற்றி பெறுகிறார்கள் என்பதில்தான் விஷயம் உள்ளது என்கிறார் சந்தீப் சாஸ்திரி.