கர்நாடகாவிலும் ஸ்ரீராம சேனையைத் தடை செய்ய பரிசீலனை! - சித்தராமையா
பெங்களூர்: கர்நாடகாவில் ஸ்ரீராம சேனை அமைப்பை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக இம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பிரமோத் முத்தாலிக் தலைமையிலான ஸ்ரீராமசேனை அமைப்பு, பப்புகளில் மது குடிக்கும், சிகரெட் புகைக்கும் பெண்களை அடிப்பதும், உதைப்பதுமாக அராஜகம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடகாவின் மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற தாக்குதலில் ஏற்கனவே அந்த அமைப்பு ஈடுபட்டதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் கோவா மாநில பாஜக அரசு ஸ்ரீராமசேனை அமைப்புக்கு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல உள்ளதாக பிரமோத் முத்தாலிக் அறிவித்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவிலும் அந்த அமைப்புக்கு தடை விதிக்க இம்மாநில அரசு யோசித்து வருகிறது.
இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், "பண்பாட்டு காவலர்களாக யாரையும் காண்பித்துக்கொள்ள அரசு அனுமதிக்காது. இதுபோன்ற செயல்களில் மீண்டும், மீண்டும் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். கோவாவை போல கர்நாடகாவிலும் ஸ்ரீராம சேனை அமைப்பை தடை செய்ய அரசு பரிசீலித்து வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications