கேலி செய்யும் கன்னடர்கள்.. போராட்டம் நடத்தும் தமிழகத்தினர்.. ஜெ.வை தமிழகத்துக்கு மாற்றுமா கர்நாடகா?
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை வைத்து கன்னடர்கள் பலர் பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்களில் தொடர்ந்து கிண்டலடித்து வருகின்றனர். ஜெயலலிதாவைப் பார்க்க பெங்களூருக்கு வரும் தமிழகத்தினர் அங்கே போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் இந்த விவகாரம் இரு மாநிலத்தினருக்கு இடையே பிரச்சினை, கலவரத்தை ஏற்படுத்தி விடுமோ என்று கர்நாடக அரசு அஞ்சுகிறது. எனவே ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்து அது யோசித்து வருகிறது.
பெங்களூர் அருகே உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து சிறைப் பகுதியில் அதிமுகவினர் பெருமளவில் திரண்டு வருகின்றனர். ஜெயலலிதாவை வாழ்த்தியும், கர்நாடக அரசின் சதியால் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறியும், போராடடங்களிலும் ஈடுபடுகின்றனர்.
திணறும் போலீஸ்
கர்நாடக அரசு வேண்டும் என்றே காவிரிப் பிரச்சினைக்காக பழி வாங்கி விட்டது. நீதித்துறையில் தலையிட்டு ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையான தீர்ப்பை கொடுத்து விட்டது. ஜாமீனிலும் விடுவிக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டு வருவதாக அதிமுகவினரும், அதிமுக வக்கீல்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். பெங்களூரில் வந்து இவர்கள் நடத்தும் போராட்டங்களால் அந்த மாநில போலீஸார் திணறி வருகின்றனர்.
உயர்நீதிமன்ற வளாகத்திலேயே வக்கீல்கள் போராட்டம்
மேலும் கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு 2 வது முறையாக ஒத்திவைக்கப்பட்டபோது அதிமுக வக்கீல்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக அரசையும், உயர்நீதிமன்ற நீதிபதி ரத்னகலாவையும் அவர்கள் கடுமையாக விமர்சித்துப் பேட்டியும் கொடுத்தனர்.
கேலி கிண்டலில் இறங்கிய கன்னடர்கள்
மறுபக்கம் ஜெயலலிதாவைக் கிண்டல் செய்யும் வேலையில் சமூக வலைத்தளங்களில் கன்னடர்கள் பலர் இறங்கியுள்ளனர். ஜெயலலிதாவுக்காக நடந்து வரும் போராட்டங்களை அவர்கள் கிண்டலடிக்கிறார்கள்.
ஜெயேந்திரரை சிறையில் அடைத்தாரே
பலர் ஜெயேந்திரரை சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா. அவருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்றும் பேஸ்புக் போன்றவற்றில் எழுதி வருகின்றனர்.
கலவரம் வெடிக்கலாம்
இப்படி இரு தரப்பும் போராட்டங்களிலும் கேலி கிண்டல்களிலும் ஈடுபட்டுள்ளதால் இரு மாநில மக்களுக்கிடையிலான போராட்டமாக, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் பிரச்சினையாக இது உருவெடுக்கலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதாம்.
சித்தராமையா ஆலோசனை
இதையடுத்து உள்துறை அமைச்சர் ஜார்ஜ், சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா ஆகியோருடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
கெளடாவும் வலியுறுத்தல்
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவதே நல்லது என்று முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவும் கூட ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறார். எனவே ஜெயலலிதாவை சிறைமாற்றம் செய்வது குறித்த யோசனையில் தற்போது கர்நாடக அரசு தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஜாமீன் கிடைக்காவிட்டால் மாற்றம்
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்று ஜாமீன் கிடைத்து விட்டால் நல்லது. ஒருவேளை கிடைக்காவிட்டால் அவரை உடனடியாக சிறை மாற்றம் செய்ய கர்நாடக அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.