கருத்து கணிப்பால் மகிழ்ச்சி.. கூட்டணி குறித்து தீவிர விவாதம்.. சிங்கப்பூர் பறந்த குமாரசாமி!
மதசார்பற்ற ஜனதாதளம் ( ஜேடிஎஸ் )கட்சியின் தலைவர் தேவ கவுடாவின் மகனான குமாரசாமி தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார்.
Recommended Video
பெங்களூர்: மதசார்பற்ற ஜனதாதளம் ( ஜேடிஎஸ் )கட்சியின் தலைவர் தேவ கவுடாவின் மகனான குமாரசாமி தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமைக்க கூட்டணி குறித்து முடிவு செய்வதற்காக அவர் சிங்கப்பூர் சென்று இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.இதில் பாஜக கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 8ல் 6 கருத்து கணிப்புகளில் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலும் தொங்கு சட்டசபை உருவாகும் என்றும் ஜேடிஎஸ் கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறது அவர்களே ஆட்சியை பிடிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி அடுத்த முதல்வர் ரேஸில் இருக்கிறார். இந்த நிலையில்தான் அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
சிங்கப்பூருக்கு சென்றுள்ள அவர் வரும் செவ்வாய் கிழமை மாலைதான் மீண்டும் பெங்களூர் வருவார். வாக்கெடுப்பு முடிந்து, முடிவுகளை தெரிந்து கொண்ட பின்தான் அவர் பெங்களூர் வர இருக்கிறார். இந்த சிங்கப்பூர் பயணத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
சிங்கப்பூரில் தேவ கவுடாவின் நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். அந்த உறவினர்கள் வீடுகளில்தான் இவர் தங்க போகிறார். அதேபோல் காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் இவரை சந்திக்க சிங்கப்பூர் சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு கட்சிகளுடன் கூட்டணி குறித்து இவர் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.
இங்கே இருந்தால் செய்தியார்களுக்கு தகவல் சென்றுவிடும் என்பதால், அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார். அதே சமயம் ஏன் சிங்கப்பூர் சென்றார் என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. பெரும்பாலும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.