ரூ 5700 கோடியில் மேக்கேதாட்டு அணை! - அடுத்த இம்சைக்குத் தயாராகும் கர்நாடகம்
பெங்களூர்: காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல், தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் கர்நாடகம், அடுத்த இம்சையைத் தரும் வேலையைத் தொடங்கிவிட்டது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்ட ரூ 5700 கோடியை ஒதுக்கி, திட்டங்களையும் தயாரித்துவிட்டதாக சித்தராமய்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைசூரில் முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "மேக்கேதாட்டு அணையை ரூ.5,700 கோடியில் கட்டுவதற்கான திட்ட விவர அறிக்கையைத் தயாரித்துள்ளோம். அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதும், பணிகள் தொடங்கப்படும்.
மேக்கேதாட்டு அணையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை விட்டுவிட்டு எஞ்சியுள்ள நீரைச் சேமித்து, பெங்களூரு மக்களின் குடிநீர் விநியோகத்துக்கு மட்டுமின்றி, மின்சாரம் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படும்.
கிருஷ்ணா, காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரங்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம்," என்றார்.
மேக்கேதாட்டு அணையைக் கட்ட தமிழகம் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனால் இதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், காவிரியின் கடைசி சொட்டு நீரையும் கர்நாடக எல்லைக்குள்ளேயே சிறைப்படுத்தும் வேலையில் தீவிரமாக இருக்கிறது கர்நாடகம்.