2 ஆண்டுகளில் இரு பெரும் சிந்தனையாளர்கள் படுகொலை.. என்ன நடக்கிறது கர்நாடகத்தில்?
கர்நாடகத்தில் கௌரி லங்கேஷ், எம்எம் கல்புர்கி ஆகிய இரண்டு அறிவுஜீவிகள் இரண்டாண்டு இடைவெளியில் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிந்தனையாளர் எம்.எம்.கல்புர்கி, அவரைத் தொடர்ந்து மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இருவரும் இரண்டாண்டு கால இடைவெளியில் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இந்துத்துவ கொள்கைகளை எதிர்த்து தன்னுடைய 'லங்கேஷ் பத்திரிகே' வார இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். அதனால் அவருக்கு வலதுசாரி இயக்கங்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. இந்நிலையில் அவர் நேற்று கொடூரமாகக் கொல்லப்பட்டார். மூன்றுமுறை அவர் மீது குண்டு பாய்ந்துள்ளது.
கௌரி, தன்னுடைய பத்திரிகையில் கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் பிரஹலாத் ஜோஷி, உமேஷ், சிவானந்த் பட் ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டைக் கூறினார்.
அவமதிப்பு வழக்கில் கைது
இதனால் அவர் மேல் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டு அவருக்கு, 2016ஆம் ஆண்டு ஆறுமாத சிறை தண்டனை வழங்கப்பட்டு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
உயிருக்கு ஆபத்து
அப்போதே அவர் வலதுசாரிகளால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளது எனக் குறிப்பிட்டார். இந்த நிலையில் தான், அவர் நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்புர்கி கொலை போலவே
அதேபோல், 2015ஆம் ஆண்டு, கன்னட எழுத்தாளும் ஆய்வறிஞருமான எம்.எம்.கல்புர்கி, ஆகஸ்டு 30ஆம் தேதி நெற்றியில் கொடூரமாகச் சுடப்பட்டு இறந்தார். இவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த காரணத்தால் அவரை கௌரியை கொன்றது போல் அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றனர்.
என்ன காரணம்
கர்நாடக மாநிலத்தில் இரண்டாண்டு கல இடைவெளியில், இரண்டு அறிவுஜீவிகள் மீது படுகொலை நிகழ்த்தப்பட்டிருப்பது மொத்த இந்தியாவையும் அசைத்துள்ளது. இவர்கள் மட்டுமில்லாது மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகிய இருவரும் இதே காரணங்களுக்காக சுட்டுக் கொல்லப்பட்டனர்.