கட்ஜூ குறிப்பிடுவது மறைந்த நீதிபதி அசோக்குமார்தான்.. ஆனால் உண்மை இல்லை: கே.ஜி. பாலகிருஷ்ணன்!
டெல்லி: ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதியை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்ததில் அரசியல் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து செயல்பட்டதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அடிப்படை ஆதாரமற்றது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவரான மார்க்கண்டேய கட்ஜூ தமது இணைய பக்கத்தில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பரபரப்பான புகார்களைத் தெரிவித்துள்ளார். அதில் 10 ஆண்டுகளுக்கு ஊழல் நீதிபதி ஒருவரை கூடுதல் நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்பதற்காக பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிரட்டியதாகவும் கூறி இருந்தார்.
இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. இது பற்றி முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நீதிபதி அசோக்குமாரைத்தான்... கே.ஜி. பாலகிருஷ்ணன் விளக்கம்
இந்த நிலையில் மார்கண்டே கட்ஜூவின் கருத்துகள் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்து கூறியுள்ளதாவது:
மார்க்கண்டேய கட்ஜூ கூறிய குற்றச்சாட்டு அடிப்படை அற்றது. அதில் உண்மை இல்லை. அரசியல் நிர்பந்தத்திற்கு உட்பட்டு நீதிபதியை நியமனம் செய்ததாக அவர் கூறியிருப்பது தவறு. அவர் சொல்வது மறைந்த நீதிபதி அசோக்குமாரைத்தான்.
10 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்த குற்றச்சாட்டை கூறுவது ஏன்? குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டை கூறுவது நியாயம் அல்ல.
மத்திய புலனாய்வுத் துறை சம்மந்தப்பட்ட நீதிபதி குறித்து அனுப்பிய அறிக்கை எனக்கு தெரியாது. அவரை ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்வது சரியானது என்று நினைத்ததாலேயே நாங்கள் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம்.
இது மட்டுமே உண்மை நிலவரம் ஆகும். இதன் பின்னணியில் எந்த அரசியல் நிர்பந்தமோ அல்லது ஊழலோ இல்லை. இவ்வாறு முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.