மின்சாரம் தராமல் ஏமாற்றுவதா? சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடருவேன்: சந்திரசேகர ராவ்
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு தரவேண்டிய மின்சாரத்தை தர மறுக்கும் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடருவேன் என்று சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீசைலம் அணையில் மின்சார உற்பத்திக்காக அம்மாநில அரசு தண்ணீர் திறந்து விடுகிறது. இதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்தார்.
ஸ்ரீசைலம் அணை தண்ணீரை தெலுங்கானா அரசு வீணாக்குவதால் ராயலசீமா பகுதி வறட்சியை சந்திக்கும் நிலை ஏற்படும். அதனால் தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என்று மத்திய நீர்ப்பாசன தீர்ப்பாயத்துக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் அலுவலகத்தை டி.ஆர்.எஸ். கட்சியினர் அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.
இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''ஆந்திர மறு சீரமைப்பு சட்டத்தை சந்திரபாபு நாயுடு மீறி வருகிறார். தெலுங்கானாவை பிடித்த சைத்தானாக அவர் இருக்கிறார். ஸ்ரீசைலம், கிருஷ்ண பட்டினம் போன்றவை சந்திரபாபு நாயுடுவின் சொத்து அல்ல.
ஆந்திர சீரமைப்பு சட்டப்படி தெலுங்கானாவுக்கு தரவேண்டிய மின்சாரத்தை சந்திரபாபு நாயுடு தரவில்லை. இது சம்பந்தமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதுதொடர்பாக, அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். தெலங்கானாவுக்கு வரவேண்டியதை வசூலிக்காமல் விடமாட்டேன்.
ஸ்ரீசைலம் அணையில் இருந்து மின்சாரம் உற்பத்தியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. 234 அடி தண்ணீர் இருக்கும் வரை மின்சாரம் உற்பத்தி செய்வோம். சந்திரபாபு நாயுடு தெலங்கானாவுக்கு 53.89 சதவீதம் மின்சாரம் தரவேண்டும். ஆனால் தரவில்லை. இது சம்பந்தமாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன். இந்த விவகாரத்தில் பிரதமர் வேடிக்கை பார்க்க கூடாது" என்றும் சந்திரசேகர்ராவ் கூறியுள்ளார்.