தர்ணா: ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு - கெஜ்ரிவால் பெயர் மிஸ்ஸிங்
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட அவரது ஆதரவாளர்கள் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் எனக் கூறி டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றஞ்சாட்டப் பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த 2 நாட்கள் அவரது அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தர்ணா போரட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தில் நேர்மையான போலீசார் உட்பட பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
கிட்டத்தட்ட 30 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டம் நேற்று வாபஸ் பெறப் பட்டுள்ள நிலையில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்,கடமையில் ஈடுபட்ட அரசு ஊழியரை தாக்கி காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குத் தொடர்பாக தர்ணா போராட்டம் நடத்தப் பட்ட இடத்தில் கூடியிருந்த அடை யாளம் தெரியாத நபர்கள் என கெஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்லி யில், 20, 21-ந்தேதிகளில் நடந்த போராட்டம் தொடர்பாக நாடாளுமன்ற தெரு போலீஸ் நிலையத்தில் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த புகாரில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.