தென் மேற்கு பருவ மழை குறைவு.. கேரளா வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பு
கேரளாவை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: தென்மேற்குப் பருவ மழை போதிய அளவு பெய்யாததால், கேரளா வறட்சி பாதித்த மாநிலம் என்று அம்மாநில சட்டசபையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சட்டசபையில் திங்கட்கிழமை எதிர்கட்சிகள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுகையில், மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. பருவமழை குறைவாக பெய்துள்ளதால் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து கூடுதல் நிதி கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன், மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை 34 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வட கிழக்கு பருவமழையும் கைகொடுக்கவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்தாலும் வறட்சியை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன், முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார். தண்ணீர் பயன்பாட்டை குறைக்கவும், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
மழை இல்லாதால் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ளதால், விவசாய கடனை செலுத்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே கேரளா, வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து கூடுதல் நிதி கேட்கப்படும் எனத் தெரிவித்தார்.