கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய தயார்... மனசாட்சிப் படி நடப்பேன் என ஷீலா தீட்சித் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கவர்னர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும், நெருக்கடிகளுக்கு பயப்படாமல் மனசாட்சிப் படி முடிவு எடுப்பேன் எனவும் கேரள கவர்னர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. புதிய ஆட்சி அமைக்கப்பட்டவுடன், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பதவியில் அமர்த்தப்பட்ட கவர்னர்களை மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கியது பாஜக.
இதனால் சில மாநில கவர்னர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். சில கவர்னர்கள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டனர். இந்தப்பட்டியலில், கேரள கவர்னராக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்து உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரான ஷீலா தீட்சித் கேரள கவர்னர் பதவியில் இருந்து நாகலாந்துக்கு மாற்றப்படலாம் அல்லது அவர் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் டெல்லி சென்ற ஷீலா தீட்சித் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஷீலா தீட்சித் கூறினாலும், அவர் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யலாம் என்ற பரபரப்பு மேலும் அதிகமானது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் கவர்னர் ஷீலா தீட்சித்தும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் ஷீலா தீட்சித் கூறியதாவது :-
கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயாராக உள்ளேன். அதே சமயம் எந்த விதமான நெருக்கடிக்கும் நான் பணிய மாட்டேன். மத்திய அரசிடம் இருந்து கவர்னர் பதவியை ராஜினாமா செய்யும்படி அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் எனது மனசாட்சிப்படி முடிவு எடுப்பேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.