'தலித்' பிள்ளைகளுடன் எங்கள் குழந்தைகள் ஒன்றாக அமருவதா? ஜாதிவெறியில் சிக்கிய 'அரசு பள்ளி'
கோழிக்கோடு: கல்வி அறிவில் முன்னணி மாநிலமான கேரளாவில் ஜாதிய ஆதிக்கத்தின் கோரத்தாண்டவத்தை அம்பலப்படுத்துகிறது கோழிக்கோடு மாவட்டத்தின் தொடக்கப் பள்ளி...
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் பெரம்பரா கிராமத்தில் அரசினர் தொடக்கப் பள்ளி உள்ளது. இது கோழிக்கொடு நகரத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.
இப்பள்ளியானது சாம்பவா அல்லது பறையா என தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக அழைக்கப்படும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே உள்ளது. இதனால்தான் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 'தலித்துகளாக' மட்டுமே இருக்கின்றனர்.
ஆதிக்க ஜாதியினராகிய நம்பியார்களோ, நாயர்களோ தங்களது பிள்ளைகளை இந்தப் பள்ளிக்கூடம் பக்கம் அனுப்புவதே கிடையாது. இதற்கு காரணம், படிக்கும் தலித் மாணவர்களுடன் எங்கள் உயர்ஜாதி பிள்ளைகள் ஒன்றாக அமருவதா? என்ற ஜாதி திமிர்தான்.
இதேபள்ளியில் கிறிஸ்துவ, இஸ்லாமிய பிள்ளைகளும் படித்த காலமும் உண்டு. ஆனால் பொருளாதார சூழல் மாற்றங்களால் அவர்கள் தனியார் ஆங்கில வழி பள்ளிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்..
கடந்த 10 ஆண்டுகளாக 'தலித்' மாணவர்கள் மட்டுமே படிக்கிற பள்ளிக் கூடமாக 'ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டது' பெரம்பரா பள்ளிக் கூடம்.. இதனால் இப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே போகிறது..
இத்தனைக்கும் அத்தனை நவீன வசதிகளைக் கொண்டதாக இந்த பள்ளி இருக்கிறது.. ஆனால் ஆயிரமாயிரமாண்டுகால ஜாதிய ஆதிக்க மனோபவம் புரையோடிக் கிடப்பதால் அத்தனை விஞ்ஞான வசதிகளும் கூட 'தீட்டுப்பட்டதாக' கிடக்கிறது..
பிஞ்சு குழந்தைகள் மீது ஜாதியத்தை பூசி ஒதுக்கி வைக்கும் இந்த மனிதகுல விரோத மனோப்பான்மை ஒழிவதுதான் எப்போது?