தாக்கலாகிறது தெலுங்கானா மசோதா.. ராஜினாமா செய்கிறார் ஆந்திர முதல்வர் கிரண்குமார்!
ஹைதராபாத்: நாடாளுமன்றத்தில் தெலுங்கானா தனி மாநிலத்துக்கு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் பதவியை கிரண்குமார் ரெட்டி இன்று ராஜினாமா செய்ய இருக்கிறார்.
தெலுங்கானா தனி மாநில மசோதாவை ஆந்திர சட்டசபை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து மாநில சட்டசபையின் ஒப்புதல் இல்லாமலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவையும் அளித்தது.
அத்துடன் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 6 எம்.பிக்களை காங்கிரஸ் கட்சி சஸ்பென்ட் செய்தும் அதிரடியைக் காட்டியது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
அப்படி தெலுங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமது பதவியை இன்றே ராஜினாமா செய்ய ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
அவருடன் சீமாந்திரா எம்.எல்.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளனர். இதனால் சீமாந்திரா பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.