”ரோட்டுல யாரும் இனிமேல் சைக்கிள் ஓட்டப்படாது” - கொல்கத்தா 'நாட்டாமை' தடை!
கொல்கத்தா: கொல்கத்தா நகர சாலைகளில் சைக்கிள்களுக்கு தடைவிதித்து போக்குவரத்து போலீஸ் கெடுபிடி செய்துவருகிறது.
கொல்கத்தா நகரின் முக்கிய சாலைகளில் சைக்கிள், இழுவை வண்டி போன்ற மோட்டார் பொருத்தப்படாத வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த உத்தரவை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவு சைக்கிள் ஓட்டுவோருக்கு பெரும் எரிச்சலைக் கொடுத்துள்ளதாம்.
நெரிசலுக்குப் பெயர் போன கொல்கத்தா
கொல்கத்தா நகர தெருக்கள் மற்றும் சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றவை. சாலைகளில் கார் , ஆட்டோ, லாரி, பஸ் போன்று வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு இடையே சைக்கிள்கள் கட்டை வண்டிகள் இழுவை வண்டிகள் போன்ற மோட்டார் பொருத்தப்படாத வாகனங்களும் சென்று போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்வது இங்கு பரவலாக காணப்படும் அம்சம்.
174 சாலைகளில் நோ சைக்கிள்
இதனால் நகரின் முக்கியமான 174 சாலைகளில் மோட்டார் பொருத்தப்படாத வாகனங்களை இயக்கக் கூடாது என கடந்த ஆண்டு மாநில போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டு இரண்டு மாதங்களுக்குள் அந்த உத்தரவை அனைவரும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
யாரும் கண்டு கொள்வதில்லை
எனினும் போக்குவரத்து போலீசார் உத்தரவை இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. மாறாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பசுமை ஆர்வலர்கள் பலரும் இந்த தடை உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என அரசை வற்புறுத்திய வண்ணம் உள்ளனர்.
மமதா மட்டும் ஏன் இப்படி
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சைக்கிள் போன்ற மோட்டார் பொருத்தப்படாத வாகனங்களை பிற மாநிலங்கள் மற்றும் நாடுகள் ஊக்குவிக்கும் நிலையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு தடை செய்வதா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிடிவாதம் பிடிக்கும் போலீஸ்
எனினும் சாலை போக்குவரத்தை நெரிசல் இல்லாமல் மாற்ற சைக்கிள்கள் போன்றவற்றை தடை செய்தே தீர வேண்டும் என மாநில போலீஸ் பிடிவாதமாக உள்ளது. தமிழக தலைநகர் சென்னையில் சைக்கிள் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் இப்படி இல்லையே
அதேபோல கம்யூனிஸ நாடான சீனாவிலும் சைக்கிள்களுக்கு தனி மரியாதையே கொடுக்கப்படுகிறது. சைக்கிளுக்காக தனிப் பாதை கூட பல நாடுகளில் அமைத்துத் தரப்படுகின்றன. ஆனால் கொல்கத்தாக்காரர்கள் ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.