ஐயயோ.. “கே.எல். ராகுல், டேய் லூசு.." “வாடா போடா” தடதடத்த ஸ்ரீகாந்த்! படபடத்த ரசிகர்கள்
கவுஹாத்தி: இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதன் தமிழ் கமெண்ட்ரியில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலை டேய் லூசு என்று ஒருமையில் எல்லை மீறி பேசி உள்ளார். தொடர்ந்து அவர் விளையாட்டு வீரர்களை ஒருமையில் பேசி வருவது பலரை முகம் சுழிக்க வைத்து உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள், ஐபிஎல் போட்டிகள், ஐசிசி கிரிக்கெட் தொடரில் நடைபெறும் போட்டிகளின் வர்ணனை ஆங்கிலத்தில் மட்டுமின்றி அந்தந்த மாநில மொழிகளிலும் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி டென் ஆகிய தொலைக்காட்சிகள் மாநில மொழிகளுக்கு என தனி சேனல்களையே தொடங்கி நடத்தி வருகின்றன. இதனால் ஆங்கிலம் தெரியாத மக்களும் கிரிக்கெட்டை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
அதிர்ந்த உலக ரசிகர்கள்.. ரிஷப் பண்ட் மட்டுமில்ல! “ஷாக்” கொடுத்த கிரிக்கெட் வீரர்களின் கோர விபத்துகள்
தமிழ் வர்ணனை
அந்த வகையில் தமிழிலும் சுமார் 10 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் வர்ணனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வர்ணனையில் பெரும்பாலும் இந்திய அணியில் விளையாடிய தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, தொலைக்காட்சி ஆங்கர்கள் என பலர் கிரிக்கெட் வர்ணனை செய்து வருகிறார்கள்.
விமர்சனங்கள்
தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்யப்படுவதில் நண்மைகள் இருந்தாலும், ஆங்கில வர்ணனையில் இருக்கும் துல்லியமும், நடுநிலையும் இல்லை என்ற விமர்சனம் பரவலாக இருந்து வருகிறது. அதேபோல், கிரிக்கெட்டை கடந்து தேவையற்ற நகைச்சுவைகளையும், கிரிக்கெட் வீரர்கள் குறித்த தனிப்பட்ட விமர்சனங்களை தமிழ் வர்ணனையாளர்கள் முன்வைப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
ஒருமையில் விமர்சிக்கும் ஸ்ரீகாந்த்
இதில் குறிப்பாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோரின் வர்ணனைகள் பல்வேறு தருணங்களில் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகின்றன. குறிப்பாக ஸ்ரீகாந்த் கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து ஒருமையில் பேசி வருவதை ரசிகர்கள் பெரிதும் விரும்பவில்லை என்பதை விமர்சனங்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
மாறாத ஸ்ரீகாந்த்
எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் சபை நாகரீகம் கருதியும், கிரிக்கெட் வீரர்களின் மாண்பை காக்கும் வகையிலும் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் ஒரு கிரிக்கெட் போட்டியில் அவர்களை ஒருமையில் அழைக்காமல் மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக இதுபோன்ற விமர்சனங்களும், கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டாலும் ஸ்ரீகாந்த் தன்னுடைய பேச்சை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்தியா - இலங்கை போட்டி
இன்றும் அதேபோல் வீரர்களை ஒருமையில் பேசினார் ஸ்ரீகாந்த். குறிப்பாக அதற்கு ஒருபடி மேலே வீரர்களை மோசமாக கமெண்ட்ரியிலேயே அவர் திட்டி இருக்கிறார். இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அசாம் தலைநகர் கவுஹாத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
கே.எல்.ராகுல் மீது விமர்சனம்
முதலில் பேட் செய்யத் தொடங்கிய இந்திய அணியில் 5 வது விக்கெட்டுக்கு பேட் செய்ய வந்த இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 29 பந்துகளில் 39 ரன்களை சேர்த்த நிலையில் அவர் ரஜிதாவின் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். அப்போது ஸ்ரீகாந்த் பொறுமை இழந்து டேய் லூசு என்று கே.எல்.ராகுலை திட்டியது பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது. இனியாவது தொலைக்காட்சி நிர்வாகம் ஸ்ரீகாந்தை கட்டுப்படுத்துமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.