பீகாரில் மண்ணை கவ்வ காரணமாக இருந்த மகா கூட்டணியை உடைத்த மகிழ்ச்சியில் பாஜக!
பிகாரில் லாலு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் பெரும் கூட்டணி அமைத்து பாஜகவை மண்ணை கவ்வச் செய்தனர். இதற்கு பழி தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த பாஜக தற்போது கூட்டணியை உடைத்து உற்சாகம் அடைந்துள்ளது.
பாட்னா: பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததன் மூலம், பெரும் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற கூட்டணியை உடைத்த உற்சாகத்தில் இருக்கிறதாம் பாஜக.
2015ம் ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில் மகா கூட்டணி வைத்து ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது.
இதன் அடிப்படையில், நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் முதல்வராகவும், லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதல்வராகப் பதவியேற்றார்கள். இதனை தாங்கிக் கொள்ள முடியாத பாஜக பல்வேறு சூழ்ச்சிகளை தொடக்கத்தில் இருந்தே செய்து வந்தது.
மோதல் போக்கு
இதற்கிடையே, லாலுவிற்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பு நீக்கத்தை லாலு திட்டினார். ஆனால் இந்தத் திட்டத்தை சிறந்த திட்டம் என நிதிஷ் குமார் ஆதரித்தார்.
சிபிஐ வழக்கு
இப்படி தொடர்ந்து கொண்டே போன முட்டல் மோதல்கள், சிபிஐ ரெய்டு மூலம் வெடித்தது. 2006ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே ஓட்டல்களை வாடகைக்கு விட்டதில் பல கோடி மோசடி செய்திருப்பதாக கூறிக் கடந்த மாதம் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.
நிதிஷ் எதிர்ப்பு
இந்த வழக்கில் துணை முதல்வர் தேஜஸ்வி பெயரும் இடம் பெற்றது நிதிஷ் குமாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தேஸ்தவி துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நிதிஷ் கூறினார்.
பயன் படுத்திக் கொண்ட பாஜக
ஆனால், லாலு பிரசாத் தன் மகன் தேஜஸ்வி, துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்று லாலு அறிவித்தார். இதனால் ஐக்கிய ஜனதா தளத்துக்கும், ராஷ்ட்டீரிய ஜனதா தளத்துக்கும் இடையே மோதல் கடுமையானது. இந்த இடைவெளியை நன்றாக பாஜக பயன்படுத்திக் கொண்டது,
நிதிஷ் குமாருக்கு பாஜக ஆதரவு
நிதிஷ் குமார் ராஜினாமா செய்வதன் மூலம் ஏற்படும் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க பாஜக கைகொடுக்கும் என்ற உத்தரவாதத்தின் பேரில் மகா கூட்டணி உடைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அது பட்டவர்த்தனமாகவே பிரதமர் மோடியின் டுவிட்டர் பாராட்டில் தெரிகிறது.
உற்சாக மகிழ்ச்சி
பிகார் சட்டசபைத் தேர்தலில் மகா கூட்டணி வைத்து பாஜகவை மண்ணைக் கவ்வச் செய்த லாலுவையும், நிதிஷ் குமார் கூட்டணி உடைத்த மகிழ்ச்சியில் இருக்கின்றார்களாம் பாஜகவினர். நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராவதற்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் ஐடியாவை பாஜக வைத்திருக்கிறதாம். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் குளறுபடி செய்து மறைமுகமாகவேனும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியை பாஜக தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.