அன்று ரூ15 லட்சம்... இன்று ரூ15,000....திரிபுராவில் பாஜக சாதித்தது இப்படித்தான்..பரபர தகவல்கள்
அரசு ஊழியர்களின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்துள்ளது பாஜக.
அகர்தலா: லோக்சபா தேர்தலில் இந்தியர் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ15 லட்சம் டெபாசிட் செய்வோம் என அதிரடியாக அள்ளிவிட்டு வாக்குகளை அறுவடை செய்தது பாஜக. இதேபாணியில் திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ரூ15,000 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என உறுதி மொழி கொடுத்து வாக்குகளை அள்ளியிருக்கிறது பாஜக.
திரிபுராவில் 25 ஆண்டுகால ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் தங்களை மீறி எந்த மாற்றமும் நடந்துவிடாது என மெத்தனத்தில் இருந்திருக்கின்றனர். இந்த மெத்தனம்தான் ஆட்சியை இப்போது பாஜகவிடம் பறிகொடுக்க வைத்திருக்கிறது.
திரிபுராவில் டேரா போட்டு இடதுசாரிகள் எங்கெங்கால்ம் சறுக்கியுள்ளனர் என ஆராய்ந்தவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுனில் தியோதர். இதில் அவர் கண்டுபிடித்ததுதான் அரசு ஊழியர்களின் படுபயங்கர அதிருப்தி.
4-வது ஊதிய குழு ஊதியம்
திரிபுராவில் அரசு ஊழியர்களுக்கு 4-வது ஊதியக் குழுவின் அடிப்படையில்தான் இப்போதுவரை ஊதியம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை திரிபுரா அரசு செயல்படுத்தாமல் இருந்துள்ளது.
7-வது ஊதிய குழு ஊதியம்
இதை கெட்டியாக பிடித்துக் கொண்டு பிரசாரத்தில் பேசியது பாஜக. பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரும் திரிபுராவில் பாஜக ஆட்சி அமைந்தால் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவோம் என உறுதி அளித்தது.
சம்பளம் கிடுகிடுவென கூடும்
அதாவது தற்போது ரூ20,000 ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ15,000 கூடுதலாக ரூ35,000 கிடைக்கும் என அறிவித்தது. இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்களுடனும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது.
அள்ளிய அரசு ஊழியர் வாக்குகள்
அவ்வளவுதான் அத்தனை அரசு ஊழியர்களின் ஓட்டுகளும் திபுதிபுவென பாஜகவுக்கு வந்து விழுந்துவிட்டன. இதை பாஜக தலைவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். அத்தனை அரசு ஊழியர்கள் வாக்குகளும் எங்களுக்கே கிடைத்தது என்கிறார் சுனில் தியோதர்.